கொல்கத்தா : புனேரி பல்தான் அணியை கடைசி 30 வினாடிகளில் வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது பெங்கால் வாரியர்ஸ்.
2019 புரோ கபடி லீக் போட்டிகளின் ஒரு பகுதி கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. பெங்கால் வாரியர்ஸ் - புனேரி பல்தான் மோதிய 81வது லீக் போட்டியில் பெங்கால் அணி ஈரான் வீரர் முகமது நபிபக்ஷ்-இன் அசத்தல் ரெய்டால் வெற்றி பெற்றது.
புனேரி பல்தான் 4 புள்ளிகள் முன்னிலையில் இருந்ததால் எப்படியும் வெற்றி பெறும் என எண்ணிய பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.
புனேரி பல்தான் அணி இரண்டாம் பாதியின் இறுதியில் முன்னிலையில் இருந்தது. கடைசி இரண்டு நிமிடங்கள் இருந்த போது 35 - 39 என்ற அளவில் 4 புள்ளிகள் முன்னிலையில் இருந்தது புனேரி.
PKL 2019: என்னா அடி! தமிழ் தலைவாஸ்-ஐ வைத்து அரைசதம் அடித்து சாதனை படைத்த டபாங் டெல்லி!
அந்த நிலை தொடர்ந்து கொண்டே செல்ல, கடைசி 30 வினாடிகளில் நபிபக்ஷ் ரெய்டு சென்றார். அவர் ஒரே ரெய்டில் 5 புள்ளிகள் பெற்று போட்டியை தலைகீழாக மாற்றினார். மாற்று வீரராக அணியின் நுழைந்த ஈரான் வீரர் மாற்றத்தை கொடுத்தார்.
அவர் ரெய்டு செல்ல காரணமே, பெங்கால் வாரியர்ஸ் அணியின் கேப்டன் மணிந்தர் சிங் அவுட் ஆகி களத்துக்கு வெளியே இருந்தது தான். அவர் ரெய்டு சென்று இருந்தால் கூட ஐந்து புள்ளிகள் பெற்று இருப்பாரா என்பது சந்தேகம் தான்.
அடுத்த ரெய்டிலும் புள்ளிகள் பெற்ற பெங்கால் அணி, போட்டி முடிவில் பெங்கால் அணி 42 - 39 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. புனேரி பல்தான் அணி அதிர்ச்சித் தோல்வி அடைந்தது. இந்த வெற்றி மூலம் பெங்கால் வாரியர்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தை எட்டிப் பிடித்துள்ளது.