அகமதாபாத் : பெங்கால் வாரியர்ஸ் அணி புரோ கபடி அரையிறுதிப் போட்டியில் யு மும்பா அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
2019 புரோ கபடி லீக் தொடரின் இரண்டாம் அரையிறுதியில் பெங்கால் வாரியர்ஸ் - யு மும்பா அணிகள் மோதின.
லீக் சுற்றில் இரண்டாம் பிடித்த பெங்கால் வாரியர்ஸ் தன் அணியின் முக்கிய ரெய்டர் மணிந்தர் சிங் காயத்தில் இருப்பதால் அவர் இல்லாமல், இந்த அரையிறுதிப் போட்டியில் பங்கேற்றது. அது யு மும்பா அணிக்கு மிகப் பெரிய சாதகமாக அமைந்தது.
முதல் பாதியின் பாதி ஆட்டம் வரை இரு அணிகளும் சரி சமமாக புள்ளிகளை எடுத்து வந்தன. ஒரு கட்டத்தில் இரு அணிகளும் 9 - 9 என சமநிலையில் இருந்தன. எனினும், அடுத்த சில நிமிடங்களில் யு மும்பாவை ஆல் - அவுட் செய்து முன்னிலை பெற்றது பெங்கால்.
முதல் பாதி முடிவில் பெங்கால் வாரியர்ஸ் அணி 18 - 12 என்ற அளவில் முன்னிலையில் இருந்தது. இரண்டாம் பாதியில் ஒரு கட்டத்தில் பெங்கால் அணி 33 - 25 என்ற அளவில் முன்னிலையில் இருந்தது.
அப்போது சுதாரித்த யு மும்பா அணி போட்டி முடிய ஒன்றரை நிமிடம் மட்டுமே இருந்த நிலையில் 35 - 35 என்ற நிலைக்கு போட்டியை எடுத்துச் சென்றது. எனினும், அடுத்து பெங்கால் அணி இரண்டு புள்ளிகள் எடுத்து போட்டியில் 37 - 35 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது.
முதல் அரையிறுதியில் டபாங் டெல்லி அணி 44 - 38 என்ற புள்ளிக் கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தது. இறுதிப் போட்டியில் டபாங் டெல்லி - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோத உள்ளன.