டெல்லி : டபாங் டெல்லி அணி அசத்தலாக ஆடி இறுதி நிமிடத்தில் பெங்களூரு புல்ஸ் அணியை வீழ்த்தியது.
2019 புரோ கபடி லீக் போட்டிகளின் ஒரு பகுதி டெல்லியில் நடைபெற்று வருகிறது. டபாங் டெல்லி - பெங்களூரு புல்ஸ் அணிகள் இந்தப் போட்டியில் மோதின.
முதல் பாதியில் அசத்திய பெங்களூரு புல்ஸ் அணி கடைசி சில நிமிடங்களில் சொதப்பி போட்டியில் கோட்டை விட்டது. டபாங் டெல்லி அணியின் நவீன் குமார் கடைசி நிமிடங்களில் அசத்தலாக செயல்பட்டு ரெய்டு புள்ளிகளை அள்ளினார்.
இந்தப் போட்டியின் முதல் பாதியில் பெங்களூரு அணியின் பவன் செஹ்ராவத் ரெய்டு வேட்டை நடத்தினார். 11வது நிமிடத்திலேயே டெல்லி அணியை ஆல்-அவுட் செய்தது பெங்களூரு. ஆறு புள்ளிகள் வரை முன்னிலை பெற்றது.
முதல் பாதியின் முடிவில் 11 - 19 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலையில் இருந்தது பெங்களூரு. இரண்டாவது பாதியில் கடைசி 3 நிமிடங்கள் இருக்கும் போது டபாங் டெல்லி அணி வேகம் பெற்றது.
அதிரடி ரெய்டுகளை மாற்றி, மாற்றி செய்து பெங்களூரு அணியை நிலைகுலைய வைத்தது. மிராஜ் சேய்க் போனஸ் புள்ளிகளை பெற்றார். நவீன் குமார் இரண்டு ரெய்டுகளில் 3 புள்ளிகளை எடுத்தார். இந்த அதிரடியால் கடைசி நேரத்தில் ஆல்-அவுட் ஆனது பெங்களூரு. டெல்லி அணி முன்னிலை பெற்றது.
அப்போதும் விடாத பெங்களூரு அணியின் பவன், இரண்டு புள்ளிகள் பெற்று சமநிலைக்கு போட்டியை எடுத்துச் சென்றார். இறுதி ரெய்டை டேக்கில் செய்த டெல்லி அணி 33 - 31 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. இறுதி நிமிடங்கள் பரபரப்பாக இருந்ததால் ரசிகர்கள் இருக்கை நுனிக்கே வந்தனர்.
டெல்லி அணி லீக் சுற்றில் சொந்த மண்ணில் வெற்றியுடன் துவக்கி உள்ளது. மேலும் இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.