அகமதாபாத் : பெங்களூரு புல்ஸ் அணியை அரையிறுதியில் வீழ்த்திய டபாங் டெல்லி அணி 2019 புரோ கபடி லீக் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
2019 புரோ கபடி லீக் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் டபாங் டெல்லி - பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின.
பரபரப்பாக நடந்த அரையிறுதியில் டெல்லி அணி 44 - 38 என்ற புள்ளிக் கணக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தியது
டபாங் டெல்லி அணி லீக் சுற்றில் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்று இருந்தது. பெங்களூரு புல்ஸ் அணி எலிமினேட்டர் போட்டியில் பங்கேற்று, உபி யுத்தா அணியை கூடுதல் நேரத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
டபாங் டெல்லியின் ரெய்டர் நவீன் குமார் தொடர்ந்து 20 போட்டிகளில் சூப்பர் 10 புள்ளிகளை பெற்று இந்த சீசனின் சிறந்த நட்சத்திரமாக வலம் வருபவர்.
மறுபுறம் பெங்களூரு புல்ஸ் அணியின் நட்சத்திர ரெய்டர் பவன் செஹ்ராவத் தனி ஒருவனாக, தன் அணியின் 65 சதவீத ரெய்டு புள்ளிகளை தானே பெற்று அணியை அரையிறுதி வரை அழைத்து வந்துள்ளார்.
இந்த இருவரில் யார் சிறப்பாக செயல்படுகிறார்களோ அந்த அணி தான் வெல்லும் என்பதே அரையிறுதிக்கு முந்தைய கணிப்பாக இருந்தது.
நவீன் குமார் சிறப்பாக ஆடினாலும் சில தவறுகள் செய்து சில முறை தானே அவுட் ஆனார். பவன் செஹ்ராவத் தனியாளாக ரெய்டுகளில் கலக்கினாலும், டெல்லி அணியின் ஆல் - ரவுண்டர் செயல்பாடுகளுக்கு முன் அவரால் தன் அணியை கரை சேர்க்க முடியவில்லை.
துவக்கம் முதலே டெல்லி அணி மின்னல் வேகத்தில் செயல்பட்டது. முதல் ஐந்து நிமிடத்திலேயே பெங்களூரு அணியை ஆல் - அவுட் செய்தது டெல்லி. முதல் பாதி முடியும் முன் மீண்டும் ஒரு ஆல் - அவுட் செய்ய பெங்களூரு அணி பரிதாப நிலையில் இருந்தது.
முதல் பாதி முடிய சில நிமிடங்கள் இருக்கும் போது தான் பெங்களூரு அணி முதல் டேக்கில் புள்ளியை பெற்றது. அந்த அளவு அந்த அணியின் தடுப்பாட்ட வீரர்கள் நவீன் குமார் முன் செயலிழந்து நின்றனர்.
முதல் பாதியில் டெல்லி அணி 26 - 18 என்ற அளவில் முன்னிலையில் இருந்தது. இரண்டாம் பாதியின் பாதி நேரம் வரை நவீன் குமார் சரியாக ரெய்டு செல்லவில்லை. அவராகவே தவறு செய்து ஆட்டமிழந்து வந்தார்.
பவன் செஹ்ராவத் தன் வேகத்தை கூட்டி புள்ளிகளை பெற்று வந்தார். டெல்லி அணியின் அனைத்து வீரர்களும் அவருக்கு ஈடு கொடுத்து ஆடினர். இரண்டாம் பாதியில் டெல்லி அணி பெங்களூருவை ஆல் அவுட் செய்தது. அப்போது 41 - 32 என்ற அளவில் போட்டி இருந்தது. அதன் பின் டெல்லி வீரர்கள் ரெய்டுகளில் நேரத்தை கடத்தத் துவங்கினர்.
ஆட்ட நேர இறுதியில் டெல்லி அணி 44 - 38 என்ற புள்ளிக் கணக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தியது. நவீன் குமார் தன் டெல்லி அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார். பெங்களூரு புல்ஸ் அணி அரையிறுதி வரை போராடி வந்தாலும், இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்தது.