பெங்களூரு : குஜராத் பார்ச்சூன் ஜெயன்ட்ஸ் அணி கடந்த சில போட்டிகளில் தொடர்ந்து தோல்வி அடைந்து வந்த நிலையில், பெங்களூரு புல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றது.
முதல் பாதியில் அசத்தலாக ஆடிய குஜராத் பார்ச்சூன் ஜெயன்ட்ஸ், இரண்டாம் பாதியில் சிறிது தடுமாறினாலும், இறுதியில் வேகம் எடுத்து 9 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த சீசனில் இரண்டாவது முறையாக பெங்களூரு அணியை வீழ்த்தி உள்ளது குஜராத்.
போட்டி துவங்கிய போது பெங்களூரு அணி அதிரடியாக புள்ளிகள் பெற்றது. எனினும், குஜராத் துரத்திப் பிடிக்க, இரு அணிகளும் 4 - 4 என சமநிலையில் இருந்தன.
12 வது நிமிடத்தில் குஜராத் வீரர் ஜிபி மோரேவின் தாக்குதல் ஆட்டம் போட்டியை மாற்றியது. பெங்களூரு புல்ஸ் தடுப்பாட்ட வீரர்கள் அவரைக் கண்டு மிரண்டனர். 14வது நிமிடத்தில் முதல் ஆல் அவுட்டை சந்தித்தது பெங்களூரு.
முதல் பாதியின் முடிவில் குஜராத் அணி 18 - 12 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலையில் இருந்தது. இரண்டாம் பாதியில் பெங்களூரு புல்ஸ் அணி போராடியது. அந்த அணியின் பவன் செஹ்ராவத் அதிரடியாக ரெய்டு செய்து வந்தார்.
எனினும், கடைசி நிமிடத்தில் பெங்களூரு அணியை மீண்டும் ஆல் அவுட் செய்தது குஜராத். அதை அடுத்து 32 - 23 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது குஜராத் அணி.
இந்தப் போட்டியில் இரு அணிகளும் டேக்கில் செய்வதில் சரி சமமாக இருந்தன. இரு அணிகளும் 13 டேக்கில் புள்ளிகள் பெற்று இருந்தன. ரெய்டில் பெங்களூரு அணி 9 புள்ளிகளும், குஜராத் 11 புள்ளிகளும் பெற்று இருந்தன. குஜராத் முன்னிலை பெற்றது போனஸ் மற்றும் ஆல் அவுட் புள்ளிகளால் தான் என்பது குறிப்பிடத்தக்கது.