பெங்களூரு : பெங்களூரு புல்ஸ் அணியின் அப்வான் செஹ்ராவத் அதிரடி ரெய்டால் தன் அணியை தனி ஒருவனாக வெற்றி பெற வைத்தார்.
கடைசி நேரத்தில் தெலுகு அணிக்கு ஒரு வீரரை தாரை வார்த்து, ஒரு புள்ளி போனாலும் பரவாயில்லை என திட்டம் போட்டு வெற்றி பெற்றது பெங்களூரு.
2019 புரோ கபடி லீக் தொடரின் பெங்களூருவில் நடைபெற்ற 77வது லீக் போட்டியில் பெங்களூரு புல்ஸ் - தெலுகு டைட்டன்ஸ் அணிகள் மோதின.
தெலுகு அணியில் சித்தார்த் தேசாய் ரெய்டுகளில் அசத்த, மறுபுறம் பெங்களூரு புல்ஸ் அணியின் பவன் கலக்கினார். இருவருமே தலா 22 ரெய்டு புள்ளிகள் எடுத்து அசத்தினர்.
எனினும், ஒரு புள்ளி வித்தியாசத்தில் பெங்களூரு புல்ஸ் வெற்றி பெற்றது. தெலுகு டைட்டன்ஸ் அணியின் விஷால் பரத்வாஜ் செய்த சில தவறுகளால் அந்த அணி வெற்றியை கோட்டை விட்டது.
முதல் பாதியில் இரு அணிகளுமே தடுப்பாட்டத்தில் சிறந்து விளங்கின. முதல் பாதி முடிவில் 15 - 12 என்ற புள்ளிக் கணக்கில் பெங்களூரு அணி முன்னிலையில் இருந்தது. அதே சமயம், தெலுகு அணியில் இரண்டு வீரர்கள் மட்டுமே களத்தில் இருந்தனர்.
PKL 2019 : எல்லோருமே சூப்பர்.. யுபி யுத்தா அணி அதிரடி வெற்றி.. எதிர்த்து போராடிய அந்த எதிரணி வீரர்!
அதனால், இரண்டாம் பாதி துவங்கிய சில நிமிடங்களில் தெலுகு அணியை எளிதாக ஆல் அவுட் செய்தது பெங்களூரு. தொடர்ந்து 9 நிமிடங்கள் இருக்கும் போது மீண்டும் ஆல் அவுட் செய்தது. ஒன்பது புள்ளிகள் முன்னிலை பெற்றது பெங்களூரு.
அடுத்த இரண்டு நிமிடங்களில் பாகுபலியாக மாறிய தெலுகு அணியின் சித்தார்த் தேசாய், ஒரே ரெய்டில் பெங்களூரு அணியின் ஆறு பேரை ஆட்டமிழக்கச் செய்து ஆல் அவுட் செய்தார். அடுத்து ஒரு மூன்று புள்ளி ரெய்டு சென்றார் சித்தார்த். அத்தோடு இரு அணிகளின் புள்ளிகளும் சம நிலையை எட்டியது.
கடைசி நிமிடத்தில் 38 - 38 என போட்டி இருந்த போது, பவன் தன் ரெய்டில் இரண்டு புள்ளிகள் எடுத்தார். வாழ்வா சாவா என்ற நிலையில், கடைசி நிமிடத்தில், கடைசி ரெய்டை செய்தார் சித்தார்த் தேசாய். பெங்களூரு அணி ஒரு வீரரை காவு கொடுத்து போட்டியை ஒரு புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரு 40 - 39 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.