அகமதாபாத் : பிளே - ஆஃப் சுற்றின் முதல் எலிமினேட்டரில் பெங்களூரு புல்ஸ் அணி, உபி யுத்தா அணியை கூடுதல் நேரத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
2019 புரோ கபடி லீக் தொடரில் பெங்களூரு புல்ஸ் - உபி யுத்தா இடையே ஆன முதல் எலிமினேட்டர் போட்டி டை ஆகி பின் கூடுதல் நேரம் வரை சென்று பரபரப்பாக முடிந்தது.
இந்தப் போட்டிக்கு முன்னதாக இரண்டு அணிகளும் தங்கள் கடைசி ஏழு போட்டிகளில் இரண்டு உச்சத்தில் இருந்தன. தான் ஆடிய கடைசி ஏழு போட்டிகளில் உபி அணி ஐந்து வெற்றிகளும், பெங்களூரு புல்ஸ் அணி ஐந்து தோல்விகளும் பெற்று இருந்தன.
அதனால், மனதளவில் உபி அணி உற்சாகத்தில் இருந்தது. அந்த அணியில் சிறப்பாக ஆடக் கூடிய பலர் இருந்தனர். பெங்களூரு புல்ஸ் அணியை பொறுத்தவரை கேப்டன் பவன் செஹ்ராவத் மட்டுமே ஒரே ஆபத்பாண்டவன். அவர் போகும் ரெய்டுகளில் புள்ளிகளை அள்ளி வருவார்.
அவரை அவுட் ஆக்கி வெளியே உட்கார வைத்தாலே வெற்றி பெறலாம் என எளிதாக திட்டம் போட்டது உபி அணி. முதல் பாதி ஆட்டத்தில் பவன் செஹ்ராவத் பாதி நேரம் அவுட் ஆக்கி வெளியே அமர வைக்கப்பட்டார்.
உபி அணி முதலில் பெங்களூரு அணியை ஆல் அவுட் செய்தது. முதல் பாதி முடிய சில நிமிடங்கள் இருக்கும் போது, பவன் செஹ்ராவத் தனி ஒருவனாக உபி அணியை ஆல் - அவுட் செய்தார். எனினும், முதல் பாதி முடிவில் உபி அணி 17 - 20 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இரண்டாம் பாதியின் துவக்கத்திலும் பவன் செஹ்ராவத் தொடர்ந்து அவுட் ஆக்கப்பட்டு வெளியே அமர வைக்கப்பட்டார். ஒரு கட்டத்தில் பெங்களூரு அணி 26 - 34 என்ற அளவில் பின் தங்கி இருந்தது. அப்போது பவன் செஹ்ராவத் மீண்டும் களம் கண்டார்.
போட்டி முடிய சில நிமிடங்களே இருக்க, பவன் செஹ்ராவத் அதிரடியைக் கூட்டினார். மறுபுறம் அதிக முன்னிலை இருப்பதால் புள்ளிகள் எடுக்க முயலாமல் ரெய்டுகளில் நேரத்தை கடத்தி வந்தது உபி அணி.
இதை பயன்படுத்திக் கொண்ட பவன் ஆல் - அவுட் செய்தார். தொடர்ந்து இரு அணிகளும் 34 - 34 என்ற சமநிலையை எட்டின. அப்போதே போட்டி உச்சகட்ட தீவிரத்தை அடைந்தது. இரண்டாம் பாதி முடிவில் இரு அணிகளும் 36 - 36 என்ற அளவில் போட்டியை டை செய்தன.
புரோ கபடி லீக் தொடரின் பிளே - ஆஃப் விதிப் படி டை ஆன போட்டிகளுக்கு கூடுதல் நேரமாக ஆறு நிமிடங்கள் வழங்கப்படும். அந்த கூடுதல் நேரத்தில் முதலில் பெங்களூரு அணி தடுமாறியது. எனினும், பவன் செஹ்ராவத் இந்த முறையும் இரண்டு ரெய்டுகளில் நான்கு, நான்கு புள்ளிகள் எடுத்து ஆல் அவுட் செய்தார்.
கூடுதல் நேர முடிவில் பெங்களூரு புல்ஸ் 48 - 45 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. உபி அணி தாக்குதல் பாணி ஆட்டத்தை தொடராமல், நேரத்தை கடத்தியது அந்த அணிக்கு முக்கியமான பிளே - ஆஃப் போட்டியில் தோல்வியை அளித்தது.