அஹமதாபாத் : 2019 புரோ கபடி லீக் தொடரின் இறுதிப் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணி 5 புள்ளிகள் வித்தியாசத்தில் டபாங் டெல்லி அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது.
இந்த ஆண்டின் புரோ கபடி லீக் தொடரின் இறுதிப் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் - டபாங் டெல்லி அணிகள் மோதின.
லீக் சுற்றில் டபாங் டெல்லி அணி முதல் இடத்தையும், பெங்கால் வாரியர்ஸ் அணி இரண்டாம் இடத்தையும் பிடித்து இருந்தன. அரையிறுதியிலும் இரண்டு அணிகளும் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் மோதின.
இரண்டு வலுவான அணிகள் மோதும் இறுதிப் போட்டி என்பதால் இந்தப் போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. அதே சமயம், பெங்கால் வாரியர்ஸ் அணி லீக் சுற்று முழுவதும் சிறப்பாக ஆடிய தங்கள் கேப்டன் மணிந்தர் சிங் இல்லாமல் இந்த இறுதிப் போட்டியை சந்தித்தது. அரையிறுதியில் மணிந்தர் சிங் இல்லாமலேயே வெற்றி பெற்ற நம்பிக்கையில் ஆடியது அந்த அணி.
துவக்கத்தில் டெல்லி அணி அபாரமாக ஆடியது. முதல் பாதியின் இறுதி நிமிடத்தில் சுதாரித்த பெங்கால் அணி டெல்லி அணியை ஆல் - அவுட் செய்து 17 - 17 என்ற புள்ளிக் கணக்கில் சமநிலையை எட்டியது.
இரண்டாம் பாதியில் டெல்லி அணியை இரண்டு முறை ஆல் அவுட் செய்த பெங்கால் ஆட்ட நேர இறுதியில் 39 - 34 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது.
மணிந்தர் சிங் இல்லாத நிலையில் கேப்டனாக செயல்பட்ட ஈரானிய வீரர் முகமது நபிபக்ஷ் சிறப்பாக ரெய்டுகள் சென்று தன் அணியை வெற்றி பெறச் செய்தார்.
இந்த தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்டு வந்த டெல்லி அணியின் இளம் வீரர் நவீன் குமார் இந்தப் போட்டியிலும் சூப்பர் 10 ரெய்டு புள்ளிகளை எட்டி தொடர்ந்து 22 போட்டிகளில் சூப்பர் 10 எடுத்து தன் சாதனையை உயர்த்திக் கொண்டார். எனினும், அவரால் டெல்லி அணியை தனி ஆளாக வெற்றிக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை.
இரண்டு அணிகளிலும் சேர்த்து பார்த்தாலும் அதிக ரெய்டு புள்ளிகள் எடுத்தவர் நவீன் குமார் தான். அவர் 18 ரெய்டு புள்ளிகள் எடுத்து இருந்தார்.