கொல்கத்தா : டபாங் டெல்லி அணி 2019 புரோ கபடி லீக் தொடரில் ஒரே போட்டியில் 50 புள்ளிகள் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.
தமிழ் தலைவாஸ் - டபாங் டெல்லி அணிகள் இடையே ஆன 80வது புரோ கபடி லீக் போட்டியில் டபாங் டெல்லி அணி 50 - 34 என்ற புள்ளிக் கணக்கில் பெரிய வெற்றியை பதிவு செய்தது.
இந்த சீசனில் 50 புள்ளிகளை ஏறிய முதல் அணி என்ற பெருமையை பெற்றது டெல்லி அணி. தமிழ் தலைவாஸ் அணி தொடர்ந்து ஆறு போட்டிகளில் தோல்வியை சந்தித்து பரிதாப நிலையில் உள்ளது.
கடந்த சீசனிலும் மோசமாக செயல்பட்டடமில் தலைவாஸ் அணி, கடந்த சீசனில் அணியில் ஆடிய மூத்த வீரர் அஜய் தாக்குருடன், ராகுல் சௌதரி, மன்ஜித் சில்லர் என மேலும் இரு மூத்த வீரர்களை அணியில் சேர்த்தது. அதன் பின்னும், இந்த சீசனில் தமிழ் தலைவாஸ் அணியால் வெற்றி பெற முடியவில்லை.
இந்த நிலையில், அந்த அணியின் பயிற்சியாளர் பாஸ்கரன் பதவி விலகினார். புதிய பயிற்சியாளராக உதய குமார் நியமிக்கப்பட்டார். இந்த மாற்றத்தால் தமிழ் தலைவாஸ் அணி வெற்றிப் பாதைக்கு திரும்புமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், அப்படி எந்த மாற்றமும் நடக்கவில்லை. டெல்லி அணியின் 19 வயது இளம் புயல் நவீன் குமாரை சமாளிக்க முடியாத தமிழ் தலைவாஸ் அணி தோல்வி அடைந்தது.
நவீன் குமார் 17 ரெய்டு புள்ளிகளை அள்ளினார். தொடர்ந்து 12 போட்டிகளில் அவர் 10க்கும் மேற்பட்ட ரெய்டு புள்ளிகளை பெற்று தன் சாதனையை தானே முந்திக் கொண்டு வருகிறார்.
தடுப்பாட்டத்தில் மிகவும் மோசமாக செயல்பட்ட தமிழ் தலைவாஸ் வெறும் மூன்று டேக்கில்கள் மட்டுமே செய்தது. அது தான் இந்தப் போட்டியில் டெல்லி 50 புள்ளிகள் வரை எளிதாக பெற முக்கிய காரணம்.
தமிழ் தலைவாஸ் அணியை மூன்று முறை ஆல் அவுட் செய்த டெல்லி 50 - 34 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது.