நொய்டா : டபாங் டெல்லி - யு மும்பா இடையே ஆன லீக் போட்டி டை ஆனது.
2019 புரோ கபடி லீக் தொடரில் நடந்த 131வது போட்டியில் டபாங் டெல்லி - யு மும்பா அணிகள் மோதின.
இரண்டு அணிகளும் தங்களின் கடைசிலீக் போட்டியில் மோதின. இந்தப் போட்டி இறுதி வரை பரபரப்பாக நடந்து பின் 37 - 37 என்ற புள்ளிக் கணக்கில் டை ஆனது.
டெல்லி அணியின் நவீன் குமார் 12 ரெய்டு புள்ளிகள் எடுத்தார். மும்பா அணியின் ரெய்டர் அபிஷேக் சிங் சூப்பர் 10 எடுத்து அசத்தினார்.
டபாங் டெல்லி முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்தியது. பத்தாவது நிமிடத்திலேயே அந்த அணி 13 - 6 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை பெற்றது. முதல் பாதி முடிவில் அந்த அணி 24 - 13 என்ற புள்ளிக் கணக்கில் டெல்லி அணி 11 புள்ளிகள் முன்னிலையில் இருந்தது.
தொடர்ந்து இரண்டு ஆல் - அவுட்களை சந்தித்த யு மும்பா அணி இரண்டாம் பாதியில் சுதாரித்தது. அந்த அணியின் அபிஷேக் சிங் ரெய்டுகளில் புள்ளிகளை அள்ளி வர, அந்த அணியின் தடுப்பாட்டமும் வலுப் பெற்றது.
யு மும்பா அணி அடுத்து தொடர்ந்து இரண்டு ஆல் - அவுட்கள் செய்து டெல்லி அணியை தவிக்க விட்டது. கடைசி சில நிமிடங்களில் இரு அணிகளும் 35 - 35 என்ற சமநிலையை எட்டின.
ஆட்ட நேர முடிவில் 37 - 37 என்ற புள்ளிக் கணக்கில் டபாங் டெல்லி - யு மும்பா போட்டி டையில் முடிந்தது.