டெல்லி : புரோ கபடி லீக் தொடரின் லீக் சுற்றில் குஜராத் பார்ச்சூன்ஜெயன்ட்ஸ் அணி, டபாங் டெல்லி அணியை வீழ்த்தியது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், தோல்வி அடைந்ததன் மூலம், இந்த தொடரில் இதுவரை தோல்வி அடையாத அணியாக வலம் வந்த டபாங் டெல்லி அணி அந்த பெருமையை இழந்தது.
அதே போல, குஜராத் அணி தோல்வி அடையாத அணி என்ற இடத்தை தக்க வைத்துக் கொண்டது. குஜராத் அணியின் ரெய்டர்கள் ரோஹித் குலியா மற்றும் ஜிபி மோரேவின் அட்டகாசமான ஆட்டத்தால் குஜராத் அணி வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் மாற்றி, மாற்றி புள்ளிகள் பெற்று ஒருவரை ஒருவர் முந்தி வந்தனர். போட்டி பெரும் விறுவிறுப்பாக நடைபெற்றது. முதல் பாதியின் முடிவில் டபாங் டெல்லி அணி 14 - 11 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலையில் இருந்தது.
அதன் பின் போட்டியின் 28வது நிமிடத்தில் தான் குஜராத் அணி முன்னிலை பெற முடிந்தது. 33வது நிமிடத்தில் 25 - 20 என்ற புள்ளிக் கணக்கில் குஜராத் அணி முன்னிலை பெற்று இருந்தது. அந்த முன்னிலையை கடைசி வரை தக்க வைத்த குஜராத் அணி போட்டியின் முடிவில் 31 - 26 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது.
டெல்லி அணியின் இளம் வீரர் நவீன் குமார் சூப்பர் 10 ரெய்டு செய்தும் டெல்லி அணியால் வெற்றி பெற முடியவில்லை. ஜிபி மோரே ரெய்டு மட்டுமல்லாது, டேக்கில் செய்வதிலும் புள்ளிகள் பெற்றுக் கொடுத்தார். அவர் 9 புள்ளிகளும், ரோஹித் 7 புள்ளிகளும் எடுத்தனர்.