டெல்லி : குஜராத் பார்ச்சூன் ஜெயன்ட்ஸ் அணியை பெரிய வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி.
2019 புரோ கபடி லீக் தொடரின் 62வது லீக் போட்டியில் குஜராத் பார்ச்சூன் ஜெயன்ட்ஸ் - ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் ஹரியானா அணி 41 - 25 என்ற புள்ளிக் கணக்கில், 16 புள்ளிகள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை பதிவு செய்தது.
ஹரியானா அணியின் நட்சத்திர ரெய்டர் விகாஸ் காண்டோலா 8 புள்ளிகளும், பிரசாந்த் குமார் 8 புள்ளிகளும் எடுத்தனர். டேக்கில் செய்வதில் சிறப்பாக செயல்பட்ட ரவி குமார் 6 புள்ளிகள் எடுத்தார்.
சுற்றி வளைத்து எல்லா இடங்களிலும் புள்ளிகளை குவித்த ஹரியானா அணி, கடந்த சீசனின் சாம்பியன் அணியான குஜராத்தை புரட்டிப் போட்டு, துவைத்து எடுத்து வெற்றி பெற்றது. ஹரியானா அணி கடந்த ஐந்து லீக் போட்டிகளில் ஒன்றில் மட்டுமே தோல்வி அடைந்து நல்ல பார்மில் இருந்தது.
இந்தப் போட்டியில், முதல் பாதியிலேயே ஆதிக்கம் செலுத்தத் துவங்கியது ஹரியானா. குஜராத் அணி தடுப்பாட்டத்தில் என்ன செய்வது என்றே தெரியாமல் தடுமாறியது. முதல் பாதியின் முடிவில் 20 - 11 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இரண்டாம் பாதியிலும் ஆதிக்கத்தை தொடர்ந்தது ஹரியானா. கடைசி நேரத்தில் 21 புள்ளிகள் வித்தியாசம் இருந்தது, அப்போது பரிசோதனை களமாக இந்தப் போட்டியை மாற்றிய ஹரியானா, சிறந்த வீரர் விகாஸ் காண்டோலாவை வெளியே அனுப்பி விட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்தது.
இறுதியில் 41 - 25 என்ற புள்ளிக் கணக்கில் அபார வெற்றி பெற்றது ஹரியானா. கடைசி வரை ஹரியானா அணியை ஒரு முறை கூட ஆல் அவுட் செய்யவில்லை குஜராத்.