நொய்டா : குஜராத் பார்ச்சூன் ஜெயன்ட்ஸ் அணி பெரிய அளவில் முன்னிலை பெற்று பின் போட்டியில் கோட்டை விட்டது. பாட்னா பைரேட்ஸ் அணியின் அதிரடி ரெய்டர் பர்தீப் நார்வால் போட்டியை தனி ஆளாக மாற்றி தன் அணியை வெற்றி பெற வைத்தார்.
2019 புரோ கபடி லீக் தொடரின் 123வது போட்டியில் குஜராத் பார்ச்சூன் ஜெயன்ட்ஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் துவக்கம் முதலே குஜராத் அணி ஆதிக்கம் செலுத்தி வந்தது. முதல் பாதி முடிவில் குஜராத் 19 - 14 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலையில் இருந்தது.
பாட்னா அணி எப்போதும் போல அந்த அணியின் கேப்டன் பர்தீப் நார்வாலின் அட்டகாச ரெய்டுகளை நம்பி ஆடியது. குஜராத் அணி தடுப்பாட்டத்தில் அவருக்கு சவால் விட்டது.
அதனால், தொடர்ந்து முன்னிலையில் இருந்த அந்த அணி கடைசி ஐந்து நிமிடங்களில் செய்த தவறுகளால் தோல்வி அடைந்தது. 23வது நிமிடத்தில் குஜராத் அணி 9 புள்ளிகள் முன்னிலையில் இருந்தது. அப்போது பர்தீப் நார்வாலை தடுக்க முடியாமல் கோட்டை விட்டது.
அடுத்த சில நிமிடங்களில் பத்துக்கும் மேற்பட்ட புள்ளிகளை அள்ளிய பர்தீப் நார்வால், கடைசி நிமிடத்தில் குஜராத் அணியை ஆல் அவுட் செய்து அசத்தினார்.
ஆட்ட நேர முடிவில் குஜராத் அணி 33 - 39 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வி அடைந்தது. பாட்னா பைரேட்ஸ் பர்தீப் நார்வாலின் மேஜிக்கால் மீண்டும் ஒரு வெற்றியை பெற்றது.