சென்னை : குஜராத் அணி கடைசி ஆறு போட்டிகளில் தோல்வி அடைந்து வந்த நிலையில், பாட்னா பைரேட்ஸ் அணியை கடைசி நேரத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
பாட்னா பைரேட்ஸ் அணி ஏற்கனவே 10 போட்டிகளில் 3 வெற்றிகள் மட்டுமே பெற்று இருந்தது. இந்த நிலையில் அந்த அணி மீண்டும் ஒரு தோல்வியை சந்தித்து புள்ளிப் பட்டியலில் சிக்கலான நிலையில் உள்ளது.
வெள்ளி அன்று நடந்த இந்த முதல் லீக் போட்டியில் குஜராத் அணியின் ரோஹித் குலியா 10 ரெய்டு புள்ளிகள் பெற்று அசத்தினார்.
பாட்னா அணியின் பர்தீப் நார்வால் முதல் பாதியில் அசத்தினாலும், இரண்டாம் பாதியில் குஜராத் அணிக்கு அவரால் ஈடு கொடுக்க முடியவில்லை.
துவக்கத்தில் குஜராத் அணியை ஆல்-அவுட் செய்து 10 - 3 என முன்னிலையில் இருந்தது பாட்னா. முதல் பாதியின் முடிவில் 4 புள்ளிகள் முன்னிலையில் இருந்தது. இரண்டாம் பாதியில் சுதாரித்த குஜராத் அணி, பாட்னாவை ஆல்-அவுட் செய்தது.
தொடர்ந்து 22 - 22 என சம நிலைக்கு போட்டியை எடுத்து வந்தது. அதன் பின் பர்தீப் நார்வாலை வெளியே அமர வைத்த குஜராத் அணி மூன்று புள்ளிகள் முன்னிலை பெற்று இறுதியில் 29 - 26 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது.