பாஞ்ச்குலா : ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி 1 புள்ளி வித்தியாசத்தில் குஜராத் பார்ச்சூன் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தியது.
2019 புரோ கபடி லீக் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது, நேற்று நடைபெற்ற 114வது லீக் போட்டியில் ஹரியானா ஸ்டீலர்ஸ் - குஜராத் பார்ச்சூன் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் கடைசி நொடியில் ஹரியானா அணி வெற்றிப் புள்ளியை எடுத்தது. மிகவும் பரபரப்பான போட்டிகளில் ஒன்றாக மாறியது இந்த மோதல்.
ஹரியானா அணியின் விகாஸ் கொண்டோலா இந்தப் போட்டியிலும் பத்துக்கும் மேற்பட்ட புள்ளிகளை அள்ளி தன் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.
குஜராத் அணி முந்தைய போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியை 29 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மாபெரும் வெற்றி பெற்று இருந்ததால் உற்சாகத்துடன் இந்தப் போட்டியை துவங்கியது.
முதல் பாதியில் 19 - 14 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலையில் இருந்தது குஜராத். ஆனால், இரண்டாம் பாதியில் ஹரியானா, குஜராத் அணியை விரட்டிக் கொண்டே வந்தது.
கடைசி நான்கு நிமிடங்கள் இருக்கும் போது ஹரியானா அணி ஒரு புள்ளி முன்னிலை பெற்றது. அதன் பின் இரு அணிகளும் மாற்றி, மாற்றி புள்ளியை சமன் செய்து கொண்டே வந்தன.
கடைசி ஒரு நொடி மீதம் இருக்கும் போது குஜராத் அணி, ஹரியானா அணியின் ரெய்டரை டேக்கில் செய்து போட்டியை சமன் செய்தது. சரி, போட்டி சமன் ஆகப் போகிறது என எதிர்பார்த்த நிலையில், அந்த ஒரு நொடியில், குஜராத் ரெய்டரை வெளியே தள்ளி அவுட் செய்த ஹரியானா அணி போட்டியில் வெற்றி பெற்றது.
ஆட்ட நேர முடிவில் 38 - 37 என்ற புள்ளிக் கணக்கில் ஹரியானா அணி வெற்றி பெற்றது.