கொல்கத்தா : பாட்னா பைரேட்ஸ் அணியின் கேப்டன் பர்தீப் நார்வால் அசத்தல் ஆட்டத்தில் அந்த அணி, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்தியது.
அதிரடி ரெய்டர் பர்தீப் நார்வால் இந்தப் போட்டியில் 14 ரெய்டு புள்ளிகள் அள்ளினார். ஜாங் குன் லீ 8 ரெய்டு புள்ளிகள் எடுத்து அணிக்கு உதவினார்.
பிங்க் பாந்தர்ஸ் அணி கடைசி நிமிடத்தில் ஆட்டம் காட்டினாலும் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற பாட்னா பைரேட்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து முன்னேறி ஒன்பதாம் இடத்தை பிடித்தது. அதன் மூலம், பிளே ஆஃப் செல்லும் போட்டியில் தன்னையும் இணைத்துக் கொண்டது அந்த அணி.
முதல் பாதியின் முடிவில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 15 - 14 என ஒரு புள்ளி வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தது. இறுதி நிமிடங்களில் இரு அணிகளும் மாற்றி, மாற்றி புள்ளிகளை பெற்று, சரிக்கு சமமாக மோதி வந்தன.
எனினும், பர்தீப் நார்வால் மற்றும் ஜாங் குன் லீ கடைசி நேர ரெய்டுகளில் தங்கள் அணியை காப்பாற்றினர். பாட்னா பைரேட்ஸ் அணி 36 - 33 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தியது.