அஹ்மதாபாத் : 2019 புரோ கபடி லீக்கில் புனேரி பல்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்.
அஹ்மதாபாத்தில் நடைபெற்ற இந்த லீக் போட்டியில் ஜெய்ப்பூர் அணி துவக்கம் முதல் இறுதி வரை சிறப்பாக செயல்பட்டு 33 - 25 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது.
புனேரி பல்தான் அணியின் நட்சத்திர ரெய்டர் டோமர் வெளியேற்றப்பட்டு பெஞ்சில் அமர வைக்கப்பட்ட பின் அந்த அணி தடுமாறத் துவங்கியது. அந்த அணியின் தடுப்பாட்டமும் சுமாராகவே இருந்தது.
முதல் பாதியில் 17 - 11 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலையில் இருந்தது ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ். குழுவாக சிறப்பாக செயல்பட்ட ஜெய்ப்பூர் அணி இறுதியில் வெற்றி பெற்றது. புள்ளிப் பட்டியலில் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியது ஜெய்ப்பூர் அணி.
ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியின் கேப்டன் தீபக் நிவாஸ் ஹூடா தன் அதிரடி ரெய்டுகளால் 9 புள்ளிகள் பெற்றுத் தந்தார். அது தான் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
புனேரி பல்தான் அணி மோசமாக ஆடி தோல்வி அடைந்து, புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. 7 போட்டிகளில் 2 வெற்றிகள் மட்டுமே பெற்றுள்ளது புனேரி பல்தான் அணி. ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 6 போட்டிகளில் 5 வெற்றிகள் பெற்று அசத்தி உள்ளது.
போட்டிக்குப் பின் பேசிய புனேரி பல்தான் அணியின் பயிற்சியாளர் அனூப் குமார், "இன்று எங்கள் ரெய்டு நன்றாக இருந்தது. எனினும், இன்றைய போட்டியை நாங்கள் தோற்றதற்கு முக்கிய காரணம் எங்கள் தடுப்பாட்டம் பலவீனமாக இருந்தது தான் எனக் கூறி உள்ளார். எங்கள் குறைகளை களைந்து அடுத்தப் போட்டியில் வலிமையுடன் களமிறங்குவோம்" என்றார்