ஜெய்ப்பூர் : தெலுகு டைட்டன்ஸ் அணியின் சித்தார்த் தேசாய் அதிரடி ரெய்டால் அந்த அணி மிரட்டலாக வென்றது. ஜெய்ப்பூர் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது.
சித்தார்த் தேசாய் புயலாக ரெய்டுகளில் கலக்கினார். 22 ரெய்டு புள்ளிகளை அள்ளி இதுவரை இல்லாத அதிரடி ஆட்டத்தை ஆடிக் காட்டினார்.
முதல் பாதியில் இரு அணிகளின் ரெய்டர்களும் ஆதிக்கம் செலுத்தினர். சரி சமமாக மோதிக் கொண்டனர். முதல் பாதி முடிவில் தெலுகு டைட்டன்ஸ் அணி 17 - 15 என்ற அளவில் சிறிய முன்னிலை பெற்றது.
இரண்டாம் பாதியில் மூன்று முறை ஜெய்ப்பூர் அணியை ஆல் அவுட் செய்தது தெலுகு டைட்டன்ஸ். அதற்கு முக்கிய காரணம் சித்தார்த் தேசாய் மட்டுமே. முதல் பாதியின் வேகத்தை இரண்டாம் பாதியில் காட்ட முடியாமல் தவித்தது ஜெய்ப்பூர் அணி.
ஆட்ட நேர முடிவில் தெலுகு டைட்டன்ஸ் அணி 51 - 31 என்ற புள்ளிக் கணக்கில் அபார வெற்றியை பதிவு செய்தது. 20 புள்ளிகள் வித்தியாசத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் வைத்து வீழ்த்தியது.
ஜெய்ப்பூர் அணியால் ஒரு முறை கூட தெலுகு டைட்டன்ஸ் அணியை வீழ்த்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மோசமான ஆட்டத்தால் ஜெய்ப்பூர் அணியின் பிளே - ஆஃப் வாய்ப்பு சிக்கலான நிலையை நோக்கி சென்றுள்ளது.
அடுத்த கட்ட புரோ கபடி லீக் போட்டிகள் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியின் சொந்த ஊரான பாஞ்ச்குலாவில் நடைபெற உள்ளது.