புனே : 2019 புரோ கபடி லீக் போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை பந்தாடியது உபி யுத்தா அணி.
உபி யுத்தா அணி கடந்த நான்கு போட்டிகளில் தொடர் வெற்றியை குவித்து வந்தது. இந்த நிலையில், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியையும் வீழ்த்தி தன் தொடர் வெற்றி வேட்டையை ஐந்தாக உயர்த்தி உள்ளது.
இந்தப் போட்டியில் 38 - 32 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது உபி யுத்தா அணி. மேலும், இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் 47 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்தில் உள்ளது.
ஜெய்ப்பூர் அணியுடனான போட்டியில் முதல் பாதியிலேயே நல்ல முன்னிலை பெற்றது உபி அணி. முதல் பாதியின் முடிவில் 20 - 13 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை பெற்று இருந்தது.
இரண்டாம் பாதியிலும் அந்த முன்னிலையை அதிகப்படுத்திய உபி யுத்தா, 29 - 21 என்ற நிலையை அடைந்தது. அதன் பின் ஜெய்ப்பூர் அணி சுதாரிக்க முயன்றாலும், அந்த அணி இறுதியில் தோல்வி அடைந்தது.
ஜெய்ப்பூர் அணியை இரண்டு முறை ஆல் அவுட் செய்த உபி யுத்தா அணி ஆட்ட நேர இறுதியில் 38 - 32 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. உபி அணியின் ஸ்ரீகாந்த் ஜாதவ், ரிஷன்க் தேவடிகா, சுரேந்தர் கில் ஆகியோர் ரெய்டு புள்ளிகளை குவித்தனர்.