சென்னை : 2019 புரோ கபடி லீகில் புனேரி பல்தான் அணி அபாரமாக ஆடி பெங்களூரு புல்ஸ் அணியை வீழ்த்தியது.
பெங்களூரு புல்ஸ் அணி வெற்றி மேல் வெற்றியாக குவித்து புள்ளிப் பட்டியலில் உச்சத்தில் இருந்தது. புனேரி பல்தான் அணி பாதாளத்தில் இருந்தது.
பெங்களூரு புல்ஸ் அணியில் இந்த சீசனில் கலக்கி வரும் பவன் செஹ்ராவத்தும் இருப்பதால் அந்த அணி எளிதாக வெற்றி பெறும் என்றே கணிக்கப்பட்டது.
ஆனால், புனேரி பல்தான் அணி 8 புள்ளிகள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பெற்றது.
இந்தப் போட்டியின் துவக்கத்தில் இரு அணிகளும் டேக்கில் செய்வதில் சிறப்பாக செயல்பட்டன. அதனால், தடுப்பாட்டம் உச்சத்துக்கு செல்ல, இரு அணிகளின் ரெய்டுகளும் தோல்வி அடைந்து வந்தன.
அதனால், முதல் பாதியில் குறைந்த அளவிலான புள்ளிகளே எடுக்கப்பட்டன. முதல் பாதி முடிவில் இரு அணிகளும் 10 - 10 என சமநிலையில் இருந்தன. இரண்டாம் பாதியின் துவக்கத்தில் புனேரி அணி, பெங்களூரு அணியை ஆல்-அவுட் செய்தது. அப்போது, போட்டியில் எட்டு புள்ளிகள் முன்னிலை பெற்றது புனேரி அணி. தொடர்ந்து எட்டு புள்ளிகளுக்கும் மேல் வித்தியாசம் இருக்குமாறு பார்த்துக் கொண்டது புனேரி பல்தான் அணி. இறுதியில் 31 - 23 என்ற புள்ளிக் கணக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தியது
புனேரி பல்தான் அணியை குறைத்து மதிப்பிட்ட பெங்களூரு அணி இரண்டு ரெய்டர்களை மட்டுமே ஆட வைத்தது. அது தான் அந்த அணியை வெகுவாக பாதித்தது. மறுபுறம் பயிற்சியாளர் அனூப் குமாரின் சரியான திட்டத்தால் புனேரி அணி அபாரமாக வெற்றி பெற்றது.