சென்னை : தமிழ் தலைவாஸ் அணியை சுற்றி சுற்றி அடித்தது பெங்களூரு புல்ஸ் அணி. அந்த அணியின் பவன் செஹ்ராவத் அதிரடி ரெய்டுகளால் தமிழ் தலைவாஸ் அணியை மிரள வைத்தார்.
2019 புரோ கபடி லீக்கின் சென்னை சுற்றுப் போட்டிகள் ஆகஸ்ட் 17 முதல் துவங்கின. முதல் போட்டியில் சொந்த மண்ணில் ஆடும் தமிழ் தலைவாஸ் அணியும், பெங்களூரு புல்ஸ் அணியும் மோதின.
தமிழ் தலைவாஸ் அணி கடந்த ஆண்டை காட்டிலும் இந்த முறை சிறந்த வீரர்களைக் கொண்டு உள்ளது. டேக்கில் செய்வதில் இந்த சீசனில் இரண்டாவது சிறந்த அணியாக விளங்கியது. நட்சத்திர ரெய்டர்கள் அஜய் தாக்குர், ராகுல் சௌதரி அணியில் இருந்தனர்.
அதனால் எப்படியும் பெங்களூரு அணியை வீழ்த்தி விடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பெங்களூரு அணியின் தூணாக இருக்கும் பவன் செஹ்ராவத் தமிழ் தலைவாஸ் அணியின் தடுப்பாட்டத்தை துச்சமாக மதித்து ரெய்டு செய்தார்.
முதல் 10 நிமிடங்களில் தமிழ் தலைவாஸ் அணி ஆல் அவுட் ஆனது. 1 - 10 என்ற நிலையில் பின் தங்கி இருந்தது. அதன் பின் போராடி முதல் பாதியின் முடிவில் 10 - 17 என்ற நிலையை எட்டியது தமிழ் தலைவாஸ்.
ஒரு கட்டத்தில் 17 - 19 என நெருக்கமாக போட்டியை எடுத்துச் சென்றது தமிழ் தலைவாஸ். கடைசி ஐந்து நிமிடங்கள் இருந்த போது 18 - 25 என்ற நிலை. இரண்டாம் பாதியில் அதுவரை அமைதியாக இருந்த பவன் செஹ்ராவத் மீண்டும் விஸ்வரூபம் எடுத்தார்.
அவரது அதிரடி ரெய்டுகளால் இறுதியில் 32 - 21 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது பெங்களூரு புல்ஸ். தன் சொந்த மண்ணில் ஆடும் முதல் போட்டியிலேயே படுதோல்வி அடைந்தது தமிழ் தலைவாஸ் அணி.
இரண்டாம் பாதியில் சிறப்பாக ஆடியும், பவன் செஹ்ராவத்தை தடுக்க முடியாமல் தோல்வி அடைந்தது தமிழ் தலைவாஸ்.