நொய்டா : ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்திய தமிழ் தலைவாஸ் 14 போட்டிகளுக்கு பின் முதல் வெற்றியை பெற்றுள்ளது.
2019 புரோ கபடி லீக் தொடரின் 127வது போட்டியில் தமிழ் தலைவாஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின.
இந்த ஆண்டு புரோ கபடி லீக் தொடரில் படு மோசமான தோல்விகளை சந்தித்த அணி என்றால் அது தமிழ் தலைவாஸ் தான்.
புள்ளிப் பட்டியலில் கட்டக் கடைசியில் இருக்கும் தமிழ் தலைவாஸ் அணி கடந்த 14 போட்டிகளில் தொடர் தோல்வியை அடைந்தது. பிளே - ஆஃப் செல்லும் வாய்ப்பை கடந்த ஆண்டு போல இந்த ஆண்டும் தவறவிட்ட தமிழ் தலைவாஸ் அணி, லீக் போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்தியது.
தமிழ் தலைவாஸ் அணியின் அஜித் குமார் மீண்டும் ஒரு முறை அட்டகாசமாக ரெய்டுகளில் அசத்தினார். முதல் பாதியில் அஜித் குமாரை சமாளிக்க முடியாமல் தடுமாறிய ஜெய்ப்பூர் அணி 5 புள்ளிகள் பின் தங்கி இருந்தது.
தமிழ் தலைவாஸ் அணி இரண்டு முறை ஜெய்ப்பூர் அணியை ஆல் - அவுட் செய்தது. ஜெய்ப்பூர் அணி இரண்டாம் பாதியில் போராடினாலும் அந்த அணியால் தமிழ் தலைவாஸ் அணியை ஆல் - அவுட் செய்ய முடியவில்லை. அது அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்தது.
ஆட்ட நேர முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 35 - 33 என்ற புள்ளிக் கணக்கில் ஆறுதல் வெற்றி பெற்றது.