சென்னை : 2019 புரோ கபடி லீக்கில் ஆகஸ்ட் 21 அன்று நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 28 - 26 என்ற புள்ளிக் கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியது.
தமிழ் தலைவாஸ் அணி சொந்த மண்ணில் தோல்விகளை சந்தித்து வந்த நிலையில், வலுவான ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்துமா? என்ற சந்தேகம் இருந்தது. எனினும், தோல்வி அடைந்தது.
இந்த போட்டிக்கு முன் ஜெய்ப்பூர் அணியின் பயிற்சியாளர், தமிழ் தலைவாஸ் அணியை வயதான குதிரை எனக் கூறி வயதான வீரர்களைக் கொண்ட அணி என குத்திக் காட்டினார்.
தமிழ் தலைவாஸ் அணி இந்தப் போட்டியில் சிறப்பாகவே ஆடியது. எனினும், சிறிய அளவில் பின்னடைவு பெற்ற தமிழ் தலைவாஸ் அணியால் தொடர்ந்து முன்னிலை பெறவே முடியாமல் போனது.
முதல் பாதியில் 13 - 11 என்ற புள்ளிக் கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி முன்னிலையில் இருந்தது. தமிழ் தலைவாஸ் அணியின் ராகுல் சௌதரி இரண்டாம் பாதியில் ஜெய்ப்பூர் அணியை ஆல்-அவுட் செய்து மிரள வைத்தார்.
அப்போது புள்ளி 17 - 17 என சமநிலையை எட்டியது. அங்கே இருந்து தமிழ் தலைவாஸ் அணி முன்னேறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜெய்ப்பூர் அணி போனஸ் புள்ளிகளை வைத்து முன்னேறியது. அந்த அணியின் நிலேஷ் 10 போனஸ் புள்ளிகள் பெற்று மிரட்டினார்.
கடைசி மூன்று நிமிடங்கள் இருக்கும் போது ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி ரிவ்யூ கேட்டது. அதன் பின் அந்த அணிக்கு 4 புள்ளிகள் முன்னிலை கிடைத்தது. அதை அப்படியே தக்க வைக்கப் போராடிய ஜெய்ப்பூர் அணி, இறுதியில் 28 - 26 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி வாகை சூடியது.