சென்னை : சென்னையில் நடந்து வரும் புரோ கபடி லீக் போட்டிகளின் இரண்டாம் நாளில் தமிழ் தலைவாஸ் - புனேரி பல்தான் அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் இரு அணிகளும் முட்டி, மோதி கடைசியாக போட்டியை டை செய்தன. தமிழ் தலைவாஸ் தீட்டிய திட்டம் திருப்பி அடித்தது தான் அந்த அணியின் வெற்றியை பாதித்தது.
இந்தப் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியின் ராகுல் சௌதரி முதல் பாதியில் தொடர்ந்து ரெய்டு சென்றார். மற்றொரு முக்கிய ரெய்டர் அஜய் தாக்குர் இரண்டாம் பாதியில் பயன்படுத்தலாம் என்ற திட்டப்படி செயல்பட்டது. ஆனால், இந்த திட்டம் தோல்வி அடைந்தது.
புனேரி பல்தான் அணியின் தடுப்பாட்டம் சிறப்பாக இருந்ததால் தமிழ் தலைவாஸ் அணி ரெய்டுகளில் அதிக புள்ளிகள் பெற முடியவில்லை. முதல் பாதி முடிய 9 நிமிடங்கள் இருக்கும் போது தமிழ் தலைவாஸ் அணியை ஆல்-அவுட் செய்தது புனேரி.
முதல் பாதியின் முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 15 - 13 என்ற புள்ளிக் கணக்கில் பின்னடைவை சந்தித்து இருந்தது. இரண்டாம் பாதியில் வேகம் எடுத்த தமிழ் தலைவாஸ் தடுப்பாட்டத்தில் சிறப்பாக செயல்பட்டது.
கடைசி மூன்று நிமிடங்கள் மீதம் இருக்கும் போது தமிழ் தலைவாஸ் அணியின் அஜீத் மட்டுமே களத்தில் இருந்தார். அவரை டேக்கில் செய்து தோற்கடித்தால் ஆல்-அவுட் மூலம் கூடுதல் புள்ளிகள் கிடைக்கும் என்ற நிலை இருந்தது. அப்படி நடந்து இருந்தால் புனேரி பல்தான் வெற்றி பெற்று இருக்கலாம்.
ஆனால், அஜீத் அட்டகாசமாக ரெய்டு செய்து 4 புள்ளிகள் பெற்று தன் அணியை மீட்டார். அதன் பின் இரு அணிகளும் சமமான புள்ளிகளில் இருந்தன. இறுதி ரெய்டுகளில் இரு அணிகளின் ரெய்டர்களும் டேக்கில் செய்யப்பட, இரண்டு அணிகளும் 31 - 31 என்ற புள்ளிக் கணக்கில் போட்டியை டை செய்தன.