சென்னை: சென்னையில் நடைபெறும் புரோ கபடி லீக் சுற்றுப் போட்டிகளில் தொடர்ந்து நான்கு போட்டிகளில் சென்னை அணி வெற்றி பெற முடியாமல் தவித்து வருகிறது.
கடந்த நான்கு போட்டிகளில் இது மூன்றாவது தோல்வி ஆகும். மற்றொரு போட்டியில் டை மட்டுமே செய்தது தமிழ் தலைவாஸ்.
மற்ற இடங்களில் நடந்த போட்டிகளில் சிறப்பாக ஆடும் தமிழ் தலைவாஸ் சொந்த மண்ணில் மட்டும் மண்ணைக் கவ்வி வருகிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் யு மும்பா அணியிடம் தோல்வி அடைந்தது.
இந்தப் போட்டியில் முதல் பாதியின் துவக்கத்தில் தமிழ் தலைவாஸ் அட்டகாசமாக ஆடியது. 12 - 6 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலையில் இருந்தது. ஆனால், முதல் பாதியின் முடிவின் போது 12 - 10 என்ற அளவிலேயே முன்னிலை பெற்றது.
இரண்டாம் பாதியில் யு மும்பா தெறிக்கவிட்டது. போட்டியில் முதன் முறையாக முன்னிலை பெற்ற அந்த அணி, தொடர்ந்து அசத்தல் ஆட்டம் ஆடி தமிழ் தலைவாஸ் அணியை ஆல்-அவுட் செய்தது. 19 - 15 என முன்னிலை பெற்றது யு மும்பா.
கடைசி நிமிடத்தில் 24 - 28 என்ற அளவில் யு மும்பா ரெய்டு சென்று மேலும் ஒரு புள்ளி பெற்றது. இறுதியில் 24 - 29 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி வாகை சூடியது யு மும்பா.