ஜெய்ப்பூர் : தெலுகு டைட்டன்ஸ் - பெங்கால் வாரியர்ஸ் இடையே ஆன போட்டியில் பெங்கால் அணி ஒரு புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2019 புரோ கபடி லீக் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது. தெலுகு டைட்டன்ஸ் - பெங்கால் வாரியர்ஸ் இடையே நடந்த லீக் போட்டியில் பெங்கால் வீரர் மணிந்தர் சிங் பட்டையைக் கிளப்பி 17 ரெய்டு புள்ளிகளை அள்ளினார்.
தெலுகு டைட்டன்ஸ் அணியின் சித்தார்த் தேசாய் 15 புள்ளிகள் எடுத்தாலும் அந்த அணி சிறிய வித்தியாசத்தில் போட்டியில் தோல்வி அடைந்தது. இரு அணிகளுமே ரெய்டுகளில் தான் ஆதிக்கம் செலுத்தின. தடுப்பாட்டம் சுமாராகவே இருந்தது.
ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் சரி சமமாக மோதின. எனினும், முதல் பாதி முடிவில் பெங்கால் அணி 19 - 13 என்ற அளவில் ஆறு புள்ளிகள் முன்னிலை பெற்றது.
போட்டி முடிய ஏழு நிமிடம் இருக்கும் போது பெங்கால் அணி, தெலுகு அணியை ஆல் அவுட் செய்தது. அதனால், நான்கு புள்ளிகள் முன்னிலை பெற்றது. அதைத் தொடர்ந்து கவனமாக ஆடிய பெங்கால் அணி ஒரு புள்ளி வித்தியாசத்தில் வெற்றியை எட்டியது.
ஆட்ட நேர முடிவில் பெங்கால் வாரியர்ஸ் அணி 40 - 39 என்ற புள்ளிக் கணக்கில், தெலுகு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.