நொய்டா : குஜராத் பார்ச்சூன் ஜெயன்ட்ஸ் அணி முதல் பாதியில் மிகப் பெரிய அளவில் பின் தங்கி இருந்தாலும், இரண்டாம் பாதியில் அதிரடியாக முன்னேறி தெலுகு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.
2019 புரோ கபடி லீக் தொடரின் 126வது போட்டியில் தெலுகு டைட்டன்ஸ் - குஜராத் பார்ச்சூன் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் முதல் பாதியில் 8 புள்ளிகள் வரை பின் தங்கி இருந்த குஜராத் அணி இரண்டாம் பாதியில் எழுச்சி பெற்று 10 புள்ளிகள் வித்தியாசத்தில் அட்டகாசமான வெற்றியை பதிவு செய்தது.
குஜராத் அணியின் சோனு ஜக்லான் 17 ரெய்டு புள்ளிகள் எடுத்து மிரட்டினார். அவர் தான் அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
முதல் பாதியில் தெலுகு டைட்டன்ஸ் அணி 21 - 13 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலையில் இருந்தது. இரண்டாம் பாதியில் ஜக்லான் ரெய்டுகளில் புள்ளிகளை வாரிக் குவித்தார்.
போட்டியின் 32வது நிமிடத்தில் குஜராத் அணி 32 - 30 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை பெற்று, திருப்பு முனை பெற்றது. அதன் பின் தொடர்ந்து முன்னிலை பெற்றது குஜராத் அணி.
ஆட்ட நேர முடிவில் குஜராத் அணி 48 - 38 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. குஜராத் அணி, தெலுகு டைட்டன்ஸ் அணியை மூன்று முறை ஆல் - அவுட் செய்தது குறிப்பிடத்தக்கது.