சென்னை : 2019 புரோ கபடி லீக் தொடரில் ஆகஸ்ட் 18 அன்று நடந்த முதல் போட்டியில் தெலுகு டைட்டன்ஸ் அணி, ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தி நீண்ட இடைவெளிக்குப் பின் வெற்றி பெற்றது.
கடந்த எட்டு போட்டிகளில் வெறும் ஒரு வெற்றியை மட்டுமே சந்தித்து மோசமான அணியாக இருந்தது தெலுகு டைட்டன்ஸ். அந்த அணியில் நட்சத்திர வீரர்களான சித்தார்த் தேசாய் மற்றும் அவரது சகோதரர் சூரஜ் தேசாய் இருந்தும் அந்த அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்தது.
இந்த நிலையில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முழு உத்வேகம் பெற்ற அந்த அணி, அசத்தலாக ஆடியது. சித்தார்த் தேசாய் மட்டுமே 18 புள்ளிகளை அள்ளினார்.
அவர் ரெய்டு சென்றாலே ஹரியானா அணி மிரண்டது. ஹரியானாவின் அசத்தல் ரெய்டர் விகாஷ் கன்டோலா பாதி நேரம் களத்துக்கு வெளியே இருக்கும் படி பார்த்துக் கொண்டது தெலுகு அணி. அது தான் அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது.
முதல் பாதியில் தெலுகு டைட்டன்ஸ் அணி 21 - 13 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலையில் இருந்தது. இரண்டாம் பாதியில் கடைசி சில நிமிடங்களில் தெலுகு அணி தடுமாறியது. அப்போது வேகமாக புள்ளிகளை அள்ளியது ஹரியானா. ஆனால், இடைவெளி அதிகம் என்பதால் அந்த அணியால் வெற்றிக்கு அருகே கூட வர முடியவில்லை.
இறுதியில் 40 - 29 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது தெலுகு டைட்டன்ஸ். இந்தப் போட்டிக்குப் பின் புள்ளிப் பட்டியலில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி ஆறாம் இடத்திலும் தெலுகு டைட்டன்ஸ் அணி ஒன்பதாம் இடத்திலும் உள்ளன.