ஜெய்ப்பூர் : 2019 புரோ கபடி லீக் போட்டியில் நடந்த இரு போட்டிகளில், பெங்கால் வாரியர்ஸ் அணியும், யு மும்பா அணியும் வெற்றி பெற்றன.
முதலில் நடந்த லீக் போட்டியில் யு மும்பா அணி 31 - 25 என்ற புள்ளிக் கணக்கில் குஜராத் பார்ச்சூன் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் முதல் பாதியில் இரு அணிகளும் 16 - 16 என சம நிலையில் இருந்தன. இரண்டாம் பாதியில் அதிரடியாக ஆடிய யு மும்பா அணி 31 புள்ளிகள் எடுத்து 6 புள்ளிகள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தியது.
யு மும்பா அணியின் அபிஷேக் சிங் 11 ரெய்டு புள்ளிகள் எடுத்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.
இரண்டாவது போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணி 1 புள்ளி வித்தியாசத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.
பெங்கால் வாரியர்ஸ் அணி 41 - 40 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. பெங்கால் அணியின் கேப்டன் மணிந்தர் சிங் 19 ரெய்டு புள்ளிகள் எடுத்து மிரட்டினார்.
இந்தப் போட்டியில் வென்றதன் மூலம், பெங்கால் வாரியர்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்தது. இதுவரை 11 வெற்றிகள் பெற்றுள்ளது அந்த அணி.
புள்ளிப் பட்டியலில் யு மும்பா அணி நான்காம் இடத்திலும், ஜெய்ப்பூர் ஏழாம் இடத்திலும், குஜராத் ஒன்பதாம் இடத்திலும் உள்ளன.