மும்பை : புரோ கபடி லீக் தொடரில் நடந்த இரு லீக் போட்டிகளில், யு மும்பா அணியும், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும் வெற்றி பெற்றன.
புரோ கபடி லீக் தொடரின் முதல் கட்டப் போட்டிகள் ஹைதராபாத் நகரில் நடந்து முடிந்தது. இரண்டாம் கட்ட போட்டிகள் மும்பையில் துவங்கியது.
போட்டியை துவக்கி வைக்க இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி அழைக்கப்பட்டு இருந்தார். அவர் தேசிய கீதம் பாடி கபடிப் போட்டியை துவக்கி வைத்தார்.
முதல் போட்டியில் யு மும்பா அணி தன் சொந்த மண்ணில் புனேரி பல்தான் அணியை சந்தித்தது. இந்தப் போட்டியில் இரு அணிகளும் தற்காப்பு ஆட்டம் ஆடின. அதனால், முதல் பாதியில் இரு அணிகளும் சேர்த்தே 20 புள்ளிகள் தான் எடுத்தன.
முதல் பாதியில் 11 - 9 என்ற புள்ளிக் கணக்கில் யு மும்பா அணி முன்னிலையில் இருந்தது. இரண்டாம் பாதியில் யு மும்பா அணி, புனேரி அணியை ஆல் அவுட் செய்தது. இறுதியில் 33 - 23 என்ற புள்ளிக் கணக்கில் யு மும்பா வெற்றி பெற்றது.
இரண்டாவது போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி பெங்கால் வாரியர்ஸ் அணியை போராடி வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் பெரும்பாலான நேரம் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி பின்னடைவை சந்தித்து இருந்தது. எனினும், கடைசி சில நிமிடங்களில் வேகமெடுத்த அந்த அணி வெற்றிக் கனியை தட்டிச் சென்றது.
போட்டியின் 40வது நிமிடத்தில் தான் ஜெய்ப்பூர் அணி புள்ளிக் கணக்கில் முன்னிலை பெற்றது. இறுதியில் 27 - 25 என்ற அளவில் வெற்றி பெற்றது. பெங்கால் அணி இரண்டாம் பாதியில் முக்கிய தருணங்களில் கோட்டை விட்டு தோல்வி அடைந்தது.