ஜெய்ப்பூர் : பெங்களூரு புல்ஸ் அணி 2 புள்ளிகள் வித்தியாசத்தில் யு மும்பா அணியை வீழ்த்தியது.
2019 புரோ கபடி லீக் தொடரின் லீக் சுற்றில் யு மும்பா - பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பெங்களூரு அணியின் பவன் செஹ்ராவத் தன் அதிரடி ரெய்டுகளால் மீண்டும் அணியை வெற்றி பெறச் செய்தார்.
இந்தப் போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் சரி சமமாக மோதின. எனினும், பவன் செஹ்ராவத் காட்டிய அதிரடியால் ஆல் - அவுட் ஆனது யு மும்பா. முதல் பாதி ஆட்ட நேர முடிவில் பெங்களூரு புல்ஸ் அணி 17 - 11 என்ற அளவில் முன்னிலையில் இருந்தது.
இரண்டாம் பாதியில் மீண்டும் யு மும்பாவை ஆல் அவுட் செய்த பெங்களூரு புல்ஸ், 12 புள்ளிகள் முன்னிலை பெற்றது. பின்னர், யு மும்பா வித்தியாசத்தை குறைத்து முன்னிலை பெற போராடியது. பெங்களூரு புல்ஸ் அணியை ஆல் - அவுட் செய்து புள்ளிகள் வித்தியாசத்தை இரண்டாக குறைத்தது.
எனினும், ஆட்ட நேர முடிவில் அந்த அணி 33 - 35 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வி அடைந்தது. பெங்களூரு புல்ஸ் அணியின் பவன் செஹ்ராவத் 10 ரெய்டு புள்ளிகள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.
இரண்டாம் பாதியில் யு மும்பாவின் அதிரடி ஆட்டம் சிறப்பானதாக இருந்தாலும், அந்த அணி முதல் பாதியில் கோட்டை விட்டதால் இந்தப் போட்டியில் தோல்வி அடைந்தது.