அகமதாபாத்: யு மும்பா அணி போட்டி முழுவதும் ஆதிக்கம் செலுத்தி ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை எலிமினேட்டர் போட்டியில் வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் வென்றதன் மூலம் 2019 புரோ கபடி லீக் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு யு மும்பா முன்னேறியது.
2019 புரோ கபடி லீக் தொடரின் பிளே - ஆஃப் சுற்றில் இரண்டாம் எலிமினேட்டர் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் யு மும்பா - ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின.
துவக்கம் முதல் இறுதி வரை இரு அணிகளின் தடுப்பாட்டமும் படுமோசமாக இருந்தது. அதே சமயம், ரெய்டில் யு மும்பா அணி முன்னிலையில் இருந்தது.
முதல் பாதி ஆட்ட நேர முடிவில் யு மும்பா அணி 22 - 15 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலையில் இருந்தது. இரண்டாம் பாதியில் தொடர்ந்து 10, 11 புள்ளிகள் வித்தியாசத்தை நகர்த்திக் கொண்டே சென்றது யு மும்பா அணி.
ஹரியானா அணியின் விகாஸ் கொண்டோலா எத்தனை போராடியும் அந்த அணியால் யு மும்பா அணியின் புள்ளிகளை நெருங்க முடியவில்லை. ஆட்ட நேர முடிவில் யு மும்பா அணி 46 - 38 என்ற புள்ளிக் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றி மூலம் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது யு மும்பா. அரையிறுதியில் பெங்கால் வாரியர்ஸ் அணியை சந்திக்க உள்ளது யு மும்பா. முதல் எலிமினேட்டரில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி, அரையிறுதியில் டபாங் டெல்லி அணியை சந்திக்க உள்ளது.