அஹ்மதாமத்: 2019 புரோ கபடி லீக்கில் ஆகஸ்ட் 16 அன்று நடந்த முதல் லீக் போட்டியில் யு மும்பா அணி, பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தியது.
முதல் பாதி மும்பா அணிக்கு சாதகமாக இருந்த நிலையில், இரண்டாம் பாதியில் பாட்னா ஆதிக்கம் செலுத்தியது. எனினும், அந்த அணி சில தவறுகளை செய்து கொண்டே தான் ஆடியது.
கடைசி நிமிடத்தில் யு மும்பா அணியின் ரோஹித் பாலியான் தன் அசத்தல் ரெய்டுகளால் அணியை தோல்வியின் விளிம்பில் இருந்து காப்பாற்றி, வெற்றி பெற வைத்தார்.
போட்டியை முதலில் புள்ளிகள் பெற்று துவக்கியது பாட்னா அணி தான். அந்த அணி துவக்கத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. எனினும், யு மும்பா அணியின் சந்தீப் நார்வால் தன் அசத்தல் ஆல்-ரவுண்ட் ஆட்டத்தால் அசத்தினார்.
அதன் விளைவாக முதல் பாதியில் யு மும்பா அணி 22 - 9 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலையில் இருந்தது. ஆனால், இரண்டாம் பாதியில் பாட்னா பைரேட்ஸ் அணி கலக்கியது. விட்ட புள்ளிகளை எல்லாம் தட்டிப் பறித்துக் கொண்டே வந்த அந்த அணி கடைசி நேரத்தில் இரண்டாவது முறையாக ஆல்-அவுட் செய்ய இருந்தது.
ஆனால், ரோஹித் பாலியான் தொடர்ந்து ரெய்டுகள் சென்று, கடைசி நிமிடத்தில் ஒரு சூப்பர் ரெய்டும் செய்து யு மும்பா அணியை வெற்றி பெற வைத்தார். இறுதியில் யு மும்பா 34 - 30 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்தத் தோல்வியுடன் சேர்த்து பாட்னா பைரேட்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் 9ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இந்தப் போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து பேசிய பாட்னா அணியின் பயிற்சியாளர் ராம் மெஹர் சிங், தடுப்பாட்டத்தில் தான் தங்கள் அணி தவறுகள் செய்தது எனக் கூறி விளாசினார்.
யு மும்பா கேப்டன் பசேல் அட்ரச்சலி கூறுகையில், ரெப்ரீக்கள் மோசமாக செயல்பட்டார்கள். அதனால் தான் போட்டியின் இடையே தங்களுக்கு பின்னடைவு ஏற்பட்டது என புகார் கூறினார். எனினும், தங்கள் அணி அதிர்ஷ்டவசமாக வெற்றி பெற்றது என்றார்.