நொய்டா : உபி யுத்தா அணி சிறப்பாக ஆடி பெங்களூரு புல்ஸ் அணியை வீழ்த்தி அதே அணியுடன் எலிமினேட்டர் போட்டியில் ஆடும் வாய்ப்பை பெற்றுள்ளது.
2019 புரோ கபடி லீக் தொடரின், லீக் சுற்றின் கடைசி போட்டியில் உபி யுத்தா - பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியின் முடிவின் அடிப்படையில் எலிமினேட்டர் சுற்றுப் போட்டிகள் முடிவாகும் நிலை இருந்தது.
இந்த நிலையில், இந்தப் போட்டியில் வெற்றி பெற்று மூன்றாம் இடத்தை பிடித்த உபி யுத்தா அணி, தோல்வி அடைந்து ஆறாம் இடத்தை பிடித்த இதே பெங்களூரு அணியுடன் முதல் எலிமினேட்டர் போட்டியில் வரும் அக்டோபர் 14 அன்று ஆட உள்ளது.
முன்னதாக லீக் போட்டியில் 45 - 33 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது உபி யுத்தா அணி. உபி அணியின் சுரேந்தர் கில் 7 ரெய்டு புள்ளிகளும், அந்த அணியின் தடுப்பாட்ட வீரர் ஆஷு சிங் 5 டேக்கில் புள்ளிகளும் பெற்றனர்.
பெங்களூரு அணியின் பவன் செஹ்ராவத் அதிரடியாக ரெய்டு செய்வார் என்பதால் திட்டமிட்டு செயல்பட்ட உபி அணி, அவரை தொடர்ந்து அவுட் ஆக்கி வெளியே அமர வைத்தது. அதன் மூலம் போட்டியில் மூன்று ஆல் - அவுட் செய்து எளிதாக வெற்றி பெற்றது.
முதல் எலிமினேட்டரில் உபி யுத்தா - பெங்களூரு புல்ஸ் மோத உள்ள நிலையில், இரண்டாம் எலிமினேட்டரில் யு மும்பா - ஹரியானா - ஸ்டீலர்ஸ் அணிகள் மோத உள்ளன.