ஜெய்ப்பூர் : 2019 புரோ கபடி லீக் தொடரில் பிளே -ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்தது தமிழ் தலைவாஸ்.
புள்ளிப் பட்டியலில் கட்டக் கடைசியில் இருக்கும் தமிழ் தலைவாஸ் அணி, இனி வரும் போட்டிகள் எல்லாவற்றிலும் வென்றால், பிளே - ஆஃப் செல்ல சிறிய வாய்ப்பு இருந்தது.
ஆனால், உபி யுத்தா அணியுடனான போட்டியில் மோசமாக ஆடி தோல்வி அடைந்து பிளே - ஆஃப் வாய்ப்பையும் முடித்துக் கொண்டது.
தமிழ் தலைவாஸ் அணி முதல் பாதியில் அசத்தலாக ஆடியது. தொடர்ந்து தோல்வி அடைந்த தமிழ் தலைவாஸ் அணியா இது என யோசிக்கும் அளவுக்கு அதிரடி காட்டியது.
ஆனால், எல்லாம் கொஞ்ச நேரம் தான். முதல் பாதி முடிவில் 14 - 13 என்ற அளவில் ஒரு புள்ளி முன்னிலை பெற்றது தமிழ் தலைவாஸ். சரி, ஏதாவது செய்து இந்தப் போட்டியில் வெல்வார்கள் என காத்துக் கொண்டு இருந்தால், இரண்டாம் பாதியில் எல்லாம் தலைகீழாக இருந்தது.
அந்நியன் போல மாறிய தமிழ் தலைவாஸ், முதல் பாதியில் ஆடியது வேற யாரோ என்பது போல இரண்டாம் பாதியில் நடந்து கொண்டது. மூன்று முறை ஆல் - அவுட் ஆன அந்த அணி இரண்டாம் பாதியில் வெறும் 8 புள்ளிகள் மட்டுமே எடுத்தது.
உபி யுத்தா அணி இரண்டாம் பாதியில் மட்டும் 29 புள்ளிகளை அள்ளியது. ஆட்ட நேர முடிவில் 42 - 22 என்ற புள்ளிக் கணக்கில், 20 புள்ளிகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது உபி யுத்தா அணி.
கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் படு மோசமாக ஆடி வரும் தமிழ் தலைவாஸ் அணி, அடுத்த ஆண்டாவது தன் குறைகளை சரி செய்து கலக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.