சென்னை : சென்னையில் நடைபெறும் புரோ கபடி லீக் போட்டிக்கு விஜய்யின் துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்த வித்யுத் ஜாம்வாலை அழைத்துள்ளனர்.
2019 புரோ கபடி லீக்கின் அடுத்த பகுதி ஆகஸ்ட் 17 முதல் சென்னையில் நடைபெற உள்ளது. அதன் துவக்க விழாவில் பங்கேற்க துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்து, தற்போது பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் வித்யுத் ஜாம்வாலை சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளது புரோ கபடி நிர்வாகம்.
மும்பை பகுதி போட்டிகளின் துவக்க விழாவில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி பங்கேற்ற நிலையில், சென்னை விழாவிற்கு வித்யுத் ஜாம்வாலை பங்கேற்க வைத்துள்ளனர்.
அவரை அழைக்க முக்கிய காரணம் அவர் நடிகர் என்பதை தாண்டி தற்காப்புக் கலையில் சிறந்து விளங்குபவர் என்பது தான். சென்னையில் நடைபெறும் துவக்க விழாவில் ஆகஸ்ட் 17 அன்று 7 மணிக்கு அவர் போட்டியை துவக்கி வைத்து முதல் போட்டிக்கு வர்ணனை செய்யவும் உள்ளார்.
சென்னை பகுதியின் முதல் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியும், பெங்களூரு புல்ஸ் அணியும் மோத உள்ளன. இரண்டு அணிகளும் புள்ளிப் பட்டியலில் ஏழு மற்றும் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளன.
தமிழ் தலைவாஸ் அணி தன் சொந்த மண்ணில் அதிக வெற்றிகளை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு மிக மோசமாக செயல்பட்ட தமிழ் தலைவாஸ் இந்த ஆண்டு ராகுல் சௌதரியை அழைத்து வந்து கலக்கி வருகிறது. ஆறு போட்டிகளில் 3 வெற்றிகள், 2 தோல்விகள், 1 டை பெற்றுள்ளது தமிழ் தலைவாஸ்.
மறுபுறம், பெங்களூரு புல்ஸ் அணி பவன் செஹ்ராவத்தின் அதிரடியால் ஏழு போட்டிகளில் 4 வெற்றிகள், 3 தோல்விகளை சந்தித்து ஐந்தாம் இடத்தில் உள்ளது. இந்த இரண்டு அணிகளும் மோத உள்ள முதல் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என கருதப்படுகிறது.