மும்பை : ஈரான் மகளிர் கபடி அணியை 2018 ஆசிய விளையாட்டுத் தொடரில் தங்கம் வெல்ல வைத்த பயிற்சியாளர் இந்தியாவின் ஷைலஜா ஜெயின்.
ஈரான் மகளிர் கபடி அணி தங்கம் வெல்லும் வரை அந்த நாட்டு அணியின் பயிற்சியாளர் ஒரு இந்தியர் என்பது இந்தியர்கள் எத்தனை பேருக்கு தெரியும்?
2018 ஆசிய விளையாட்டில் மகளிர் கபடி இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி தான் ஈரான் அணி வெற்றி பெற்றது. அப்போது ஈரான் அணியின் வெற்றிக்கு பின்னால் இருப்பது ஒரு இந்தியர் என்ற தகவல் வேகமாக பரவியது. அன்றே பிரபலங்களில் ஒருவராக மாறி விட்டார் ஷைலஜா ஜெயின்.
சமீபத்தில் சிம்பயாசிஸ் ஸ்போர்ட்ஸ் சென்டர் சார்பில் கிருதபூஷன் என்ற விருது ஷைலஜாவுக்கு வழங்கப்பட்டது. அப்போது ஈரான் மகளிர் அணியின் வெற்றிக்கு பின் தன் வாழ்க்கை மாற்றத்தை பற்றி பகிர்ந்து கொண்டார். "என் வாழ்க்கை நிறைய மாறி விட்டது. இப்போது நிறைய போன் கால்கள் வருகிறது. பலர் இப்போதும் தொலைபேசியில் வாழ்த்து கூறுகிறார்கள். சிலர் விழாக்களுக்கு என்னை தலைமை ஏற்க அழைக்கிறார்கள்" என்றார்.
தற்போது நாசிக்கில் தன் சொந்த கபடி பயிற்சி மையத்தை நிர்வகித்து வரும் ஷைலஜா, அதில் கவனம் செலுத்தக் கூட இப்போது நேரம் இல்லை என கூறினார்.
இவரை ஏன் இந்திய கபடி அணிகளுக்கு பயிற்சியாளராக நியமிக்கக் கூடாது?