சென்னை: 2019 புரோ கபடி லீக் தொடர் வரும் ஜூலை 20 முதல் துவங்க உள்ளது.
ஹைதராபாத் நகரில் தொடங்க உள்ள முதல் போட்டியில் யு மும்பா, தெலுகு டைடன்ஸ் அணிகள் மோத உள்ளன.
கடந்த சீசனில் மிகவும் சொதப்பலாக ஆடிய தமிழ் தலைவாஸ் அணி இந்த முறையாவது பிளே-ஆஃப் வரை செல்லுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஐந்தாவது மற்றும் ஆறாவது சீசனில் மட்டுமே ஆடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு கூட முன்னேறவில்லை. இந்த நிலையில் ஏழாவது சீசனில் காலடி எடுத்து வைத்துள்ளது.
கடந்த முறை கேப்டன் அஜய் தாக்குர் இருந்ததால், தமிழ் தலைவாஸ் அணி மீது பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. அவர் மட்டுமே அந்த தொடரில் சிறப்பாக ஆடினார். மற்ற வீரர்கள் சொதப்பியதால் தமிழ் தலைவாஸ் அணி மோசமான தோல்விகளை சந்தித்தது.
இந்த சீசனில் இந்த அணி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது. காரணம், அணியில் செய்த சில மாற்றங்கள் தான். இதுவரை புரோ கபடி லீக்கில் அதிக ரெய்டு புள்ளிகள் பெற்று இருக்கும் ராகுல் சௌத்ரியை 94 லட்சம் கொடுத்து வளைத்துப் போட்டுள்ளது தமிழ் தலைவாஸ்.
அதே போல தற்காப்பு ஆட்டம் ஆட மோஹித் சில்லர், மன்ஜீத் சில்லர் மற்றும் ரான் சிங் இருப்பது பலத்தை பல மடங்கு அதிகரித்துள்ளது.
இந்த சீசனில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 18 வீரர்கள் மூலம் தமிழ் தலைவாஸ் அணி சிறந்த சமபலம் கொண்ட அணியாக மாறி இருக்கிறது. பழைய அணிக்கும், இதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. எனவே, இந்த முறை தமிழ் தலைவாஸ் அணி வெற்றிநடை போடும் என நம்பப்படுகிறது.
கோப்பை வெல்லா விட்டாலும் பிளே-ஆஃப் வரை செல்வதே இப்போது முக்கியம் என்பதை தமிழ் தலைவாஸ் அணி உணர்ந்து அதற்கேற்ப திட்டமிடும். கடந்த சீசனில் ஏற்பட்ட மோசமான தோல்விகளை மறக்கும் அளவுக்கு தொடரின் துவக்கத்தில் இருந்தே வெற்றிகளை குவிக்க வேண்டும் என்பதும் அவசியம்.