கோல்கட்டா: சச்சின் டெண்டுல்கரின் தமிழ் தலைவாஸ் அணிக்கு நேரம் சரியில்லை. சரி நேற்று நடந்த குரு பெயர்ச்சியாவது கைகொடுக்குமா என்றால், அதுவும் நடக்கவில்லை.
புரோ கபடி லீக், 5வது சீசனில், முதல் முறையாக அறிமுகமான தமிழ் தலைவாஸ் அணி மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. சச்சின் டெண்டல்கரின் இந்த அணிக்கு, பிக் பாஸ் கமல்ஹாசன் ஆதரவு என, அமர்க்களமாக அறிமுகமானது. அதைவிட, அஜய் தாக்குர் கேப்டனாக அமைந்தது, அணிக்கு மிகப் பெரிய பலமாக இருந்தது.
ஆனால், இந்தத் தொடரில், நேற்று இரவு நடந்த, பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்திலும், தமிழ் தலைவாஸ் தோல்வி அடைந்தது. இதுவரை, 9 போட்டிகளில், ஒன்றில் மட்டும் வெற்றி, 6ல் தோல்வி, 2 டை என, 16 புள்ளிகளுடன், புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது தமிழ் தலைவாஸ்.
கோல்கட்டாவில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில், பெங்கால் வாரியர்ஸ் அணி 29-25 என வெற்றி பெற்றது. துவக்கத்தில் இருந்தே, தமிழ் தலைவாஸ் அணி, பலத்த போட்டியை கொடுத்தது. ஆனாலும், பெIங்கால் வாரியர்ஸ் அணி, டேக்ளிங்கில் புள்ளிகளை அள்ளியது. முதல் பாதியின் இறுதியில், 18-9 என, பெங்கால் வாரியர்ஸ் முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில், தமிழ் தலைவாஸ் அணி, அபாரமாக விளையாடியது. முதல் பாதியில், 9 புள்ளிகளை மட்டுமே பெற்ற அந்த அணி, இரண்டாவது பாதியில், 16 புள்ளிகளை குவித்தது,
புள்ளி வித்தியாசத்தை தமிழ் தலைவாஸ் குறைத்து வந்தாலும், பெங்கால் வாரியர்ஸ் அணியும் அவ்வப்போது புள்ளிகளை பெற்று, 29-25 என்ற புள்ளியில் வென்றது.
மற்றொரு ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 31-25 என்ற கணக்கில், குஜராத் பார்ச்சூன்ஜயன்ட்ஸ் அணியை வென்றது.