ஷைலி சிங்
டோக்கியோ ஒலிம்பிக் தொடருக்கு பிறகு, மிக முக்கியமான தொடராக உலக இளையோர் U20 தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் நடைபெற்று வருகின்றன. இதில், நீளம் தாண்டுதலில் இந்திய வீராங்கனை ஷைலி சிங் வெள்ளிப்பதக்கம் வென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
வெள்ளிப்பதக்கம்
முன்னதாக கடந்த ஆக.20ம் தேதி நடைபெற்ற தடகள போட்டியில் பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் ஷைலி சிங் 6.40 மீட்டர் தாண்டி சாதனை படைத்தார். கர்நாடக மாநிலம், பெங்களூருவில் பிறந்த ஷைலி சிங் முதலில் 6.34 மீட்டரையும், 2வதாக 5.98 மீட்டரையும் தாண்டி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் 17 வயதான ஷைலி சிங், 6.59 மீ நீளம் தாண்டி வெள்ளிப்பதக்கத்தை வென்றார். இவருடன் போட்டியில் பங்கேற்ற ஐரோப்பிய ஜூனியர் சாம்பியன் மஜா அஸ்காக் 6.60 மீட்டர் நீளம் தாண்டி தங்கபதக்கத்தை வென்றார். இவர்கள் இருவருக்கு இடையிலான இடைவெளி வெறும் 1 செ.மீட்டர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய கீதம்
போட்டி முடிந்த பிறகு பேசிய ஷைலி சிங், "இறுதிப் போட்டிக்கு முன்பு எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம் என்று என் அம்மா என்னிடம் கூறினார். நான் தங்கம் வெல்வேன் என்று அவர் எதிர்பார்த்தார். அடுத்த முறை, நான் நிச்சயம் தங்கம் வெல்வேன். மைதானத்தில் நமது இந்திய நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்படுவதை நான் கேட்க விரும்பினேன். single mother-ஆக இருப்பதால், என் தாய்க்கு இது கடினமாக இருந்தது, ஆனால் என் அம்மா என்னையும், என் சகோதரியையும், என் சகோதரனையும் கவனித்துக்கொண்டார்" என்றார்.
தேசிய சாதனை
தேசிய சாதனை படைத்தவரும், சீனியர் உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்ற அஞ்சு, ஷைலி அதிக உயரங்களை எட்டி நாட்டுக்காக ஒலிம்பிக் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார். இதுகுறித்து அஞ்சு கூறுகையில், "அவர் தனது தேசிய சாதனையை (6.83 மீட்டர்) இன்னும் மேம்படுத்த முடியும். நமது முக்கிய இலக்கு ஷைலியை ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்வதற்கு உதவுவதாகும். இது மிகவும் மதிப்புமிக்க விஷயம். நாம் பயிற்சி அளிப்பவர் பதக்கம் வெல்ல முடிந்தால், அதை நான் என்னுடைய பதக்கமாக கருதுகிறேன்" என்றார்.
புதிய நம்பிக்கை
முன்னதாக டோக்கியோ ஒலிம்பிக்கில், ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா 87.58 மீட்டர் தூரம் வீசி இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் வென்றுக் கொடுத்தது மறக்க முடியாத நிகழ்வாக அமைந்தது. ஒலிம்பிக்கில் தனி நபர் ஆட்டத்தில் தங்கப்பதக்கம் வெல்லும் 2வது இந்தியர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றார் . இதற்கு முன்னர் கடந்த 2008ம் ஆண்டு நடைபெற்ற பெய்ஜிங் ஒலிம்பிக்கில் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் அபினவ் பிந்த்ரா தங்கப்பதக்கம் வென்றிருந்தார். ஒலிம்பிக் தொடரில் இந்தியா கடந்த 1920ம் ஆண்டு முதல் பங்கேற்று வருகிறது. பல்வேறு போட்டிகளிலும் இந்தியா பதக்கங்களை வென்று வந்தாலும், தடகளப்போட்டியில் மட்டும் இதுவரை ஒரு பதக்கத்தை கூட வென்றதில்லை. கடந்த 1960ம் ஆண்டு மில்கா சிங், 1984ம் ஆண்டு பி.டி.உஷா ஆகியோரால் கூட பதக்கம் வென்று கொடுக்க முடியவில்லை. இந்நிலையில் பதக்கத்திற்காக 100 ஆண்டுகளாக காத்திருந்த இந்தியாவின் ஏக்கத்தை நீரஜ் சோப்ரா போக்கியிருந்தார். இப்போது மீண்டும் அப்படியொரு நம்பிக்கையை ஷைலி சிங் விதைத்துள்ளார். வெறும் ஒரு செ. மீட்டரில் தங்கப்பதக்கத்தை தவறவிட்டார். இல்லையெனில், ஒரு புதிய சாதனை படைக்கப்பட்டிருக்கும். இருந்தாலும், இவரது வேகம், துடிப்பு ஆகியவற்றை கண்டு வியக்கும் சீனியர்கள், ஷைலி சிங் நிச்சயம் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்வார் என்று உறுதியாக நம்புகின்றனர்.