ஜப்பான் திட்டம்
2020 ஒலிம்பிக் தொடர் ஜூலை 24 அன்று துவங்க உள்ளது. அந்த மிகப் பெரும் விளையாட்டுத் தொடரை பிரம்மாண்டமாக நடத்த ஜப்பான் கடந்த சில ஆண்டுகளாக அருமையாக திட்டமிட்டு செயல்பட்டு வந்தது. ஆனால், எதிர்பாராவிதமாக கொரோனா வைரஸ் பீதியை கிளப்பியது.
கொரோனா வைரஸ் அச்சம்
2020-இன் துவக்கத்தில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவி பீதியை கிளப்பி உள்ளது. இந்த நிலையில் 2௦20 ஒலிம்பிக் தொடர் திட்டமிட்டபடி நடக்குமா? என்ற சந்தேகம் அனைவருக்கும் உள்ளது. ஆனால், ஜப்பான் தெளிவாக உள்ளது.
சிறிதும் அஞ்சவில்லை
துவக்கம் முதலே ஒலிம்பிக் தொடரை நடத்துவதில் மிகத் தீவிரமாக உள்ளது ஜப்பான். கொரோனா பற்றி அந்த நாட்டின் ஒலிம்பிக் அமைப்போ, அரசோ சிறிதும் அஞ்சவில்லை. ஒலிம்பிக் தொடரை நடத்துவதில் இருந்து பின்வாங்கவில்லை.
டிரம்ப் யோசனை
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவிடம் பேசினார். அதன் பின் ஊடகங்களிடம் பேசிய டிரம்ப் 2020 ஒலிம்பிக் தொடரை ஓராண்டுக்கு ஒத்தி வைக்குமாறு தான் யோசனை கூறியதாக தெரிவித்தார்.
காலி மைதானம்
காலி மைதானத்தில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தலாம் என ஒரு சாரார் கூறி வரும் நிலையில், அப்படி ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு பதில், தள்ளி வைப்பது சிறந்த முடியவு எனவும் டிரம்ப் கூறி உள்ளார். டிரம்ப் கூறி இருப்பது மிகச் சரியான யோசனை.
உடல்நலன்
காரணம், ஒலிம்பிக் தகுதிச் சுற்று போட்டிகள் பல வகைகளில் கொரோனாவால் தடைபட்டுள்ளன. அதே போல, வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகள் நடந்தாலும் தங்கள் உடல்நலனை பணயம் வைத்து தான் அதில் பங்கேற்க வேண்டும்.
தள்ளி வைக்கும் திட்டம் இல்லை
இதை குறிப்பிட்டு தான் பலரும் ஒலிம்பிக் போட்டிகளை ஒத்தி வைக்குமாறு கூறி வருகின்றனர். ஆனால், ஜப்பான் அரசு செய்தி தொடர்பாளர் யோஷிஹிடே சுகா பேசுகையில், ஒலிம்பிக் தொடரை தள்ளி வைப்பது பற்றி எந்த திட்டமும் இல்லை என்று கூறினார்.
அதெல்லாம் யோசிக்கவே இல்லை
திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் என்றும், பார்வையாளர்கள் இல்லாமல் நடத்துவது பற்றியோ, தள்ளி வைப்பது பற்றியோ நாங்கள் சிந்திக்கவே இல்லை என போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் கூறி வருகின்றனர்.