ரியோடி ஜெனீரோ:இத்தாலியுடன் நடந்த போட்டியின்போது அந்த அணியின் ஜியார்ஜியோ சிலெனினியின் தோள் பட்டையில் பல் பதியும் அளவுக்கு கடித்த உருகுவ வீர்ர் லூயிஸ் சுவாரஸுக்கு 24 போட்டிகளில் ஆட தடை விதிக்கப்படும் என்று தெரிகிறது.
இந்த கடி விவகாரம் தொடர்பாக சர்வதேச கால்பந்துக் கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணையைத் தொடங்கியுள்ளது.
சுவாரஸின் செயல் சர்வதேச கால்பந்துக் கழகத்தின் வீரர்களுக்கான நடத்தை விதி 48 மற்றும் 57 ஆகியவற்றை அப்பட்டமாக மீறிய செயல் என்றும் கால்பந்துக் கழகம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக உருகுவே அணி நிர்வாகம் மற்றும் உருகுவே கால்பந்து சங்கம் தனது விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் சர்வதேச கால்பந்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் ஜூன் 25ம் தேதிக்குள் உரியவர்கள் சமர்ப்பிக்குமாறும் அது கேட்டுக் கொண்டுள்ளது.
தற்போதைய நிலையில், சுவாரஸுக்கு 24 போட்டிகளில் ஆட தடை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு இத்தாலி வீரர் மாரோ டஸ்ஸோட்டிக்கு 8 போட்டிகளில் ஆட சர்வதேச கால்பந்துக் கழகம் விதித்த தடையே அதிகபட்ச தடையாக உள்ளது.
மாரோ, ஸ்பெயின் வீரர் லூயிஸ் எனிக்கின் மூக்கை உடைதத சம்பவம் 1994 போட்டியின்போது நடந்த்து. அப்போது அந்தத் தண்டனை அவருக்கு அளிக்கப்பட்டது.
சுவாரஸ் இப்படிக் கடிப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு 2 முறை இப்படிக் கடித்த பல போட்டிகளில் ஆட தடை விதிக்கப்பட்டவர்தான் என்பது நினைவிருக்கலாம்.