மார் 15ம் தேதி துவக்கம்
சர்வதேச துப்பாக்கி சுடுதல் பெடரேஷன் சார்பில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி இந்தியாவின் டெல்லியில் வரும் மார்ச் மாதம் 15ம் தேதி துவங்கி 26ம் தேதிவரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.
இந்திய ரைபிள்ஸ் கழகம் அறிவிப்பு
வரும் 15ம் தேதி துவங்கவுள்ள உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிகளுக்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது சீனா, தைவான், ஹாங்காங், மாக்காவ், வடகொரியா மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகள் போட்டியிலிருந்து விலகியுள்ளதாக இந்திய தேசிய ரைபிள்ஸ் கழகம் அறிவித்துள்ளது.
சீனா விலகல்
கொரனோ வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சீனா, போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. கொரனோ வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள நிலையில், அதை மற்றவர்களுக்கு பரப்ப விரும்பவில்லை என்று சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரனோ பாதிப்பால் மற்ற நாடுகளில் பயணம் மேற்கொள்ள விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக அந்த நாடுகளும் போட்டியிலிருந்து விலகியுள்ளன.
என்ஆர்ஏஐ தலைவர் அறிவிப்பு
இதனிடையே இந்த போட்டிகளில் பாகிஸ்தானும் பங்கேற்காது என்று இந்திய தேசிய ரைபிள்ஸ் கழகத்தின் தலைவர் ரனிந்தர் சிங் தெரிவித்துள்ளார். அந்த நாட்டின் துப்பாக்கி சுடும் வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளுக்காக தயாராகி வருவதால், உலக கோப்பையில் பங்கேற்கவில்லை என்று பாகிஸ்தான் சூட்டிங் பெடரேஷன் துணை தலைவர் தெரிவித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
விசா மறுத்த விவகாரம்
கடந்த முறை துப்பாக்கி சுடுதல் உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்தியா தரப்பில் விசா மறுக்கப்பட்டது. இதையடுத்து சர்வதேச போட்டிகளை நடத்த இந்தியாவிற்கு சிறிது காலம் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த முறை நடைபெற்ற சம்பவத்தை தற்போது ஒப்புநோக்க வேண்டாம் என்றும் ரனிந்தர் சிங் மேலும் குறிப்பிட்டார்.