ஒலிம்பிக் இந்திய குழு
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இதுவரை இல்லாத வகையில் இந்தியாவில் இருந்து 288 பேர் கொண்ட மிகப்பெரும் குழு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்தியா சார்பில் மொத்தம் 127 வீரர், வீராங்கனைகள் 18 விளையாட்டு பிரிவுகளின் கீழ் பங்கேற்கின்றனர். இந்நிலையில் இதில் பதக்கம் வெல்பவர்களுக்கு உலகில் எந்த நாட்டிலும் கிடைக்காத பெரும் பரிசுத் தொகைகள் கிடைக்கவுள்ளன.
அதிக பரிசுத்தொகை
இந்தியாவின் ஒவ்வொரு மாநில அரசும் தங்களது வீரர், வீராங்கனைகள் பதக்கம் வென்றால் கோடிகளில் பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. அதில் குறிப்பாக ஹரியானா, உத்தரப்பிரதேசம், சட்டீஸ்கர், ஒடிசா, சண்டிகர் ஆகிய அரசுகள் தங்கள் மாநிலத்தை சேர்ந்தவர்கள் தங்க பதக்கம் வென்றால் ரூ.6 கோடியும், வெள்ளிப்பதக்கம் வென்றால் 4 கோடியும், வெங்கல பதக்கம் வென்றால் ரூ.2.5 கோடியும் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
தமிழக அரசு அறிவிப்பு
இதே போல தமிழக வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ.3 கோடி, வெள்ளிப்பதக்கம் வென்றால் ரூ.2 கோடி, வெங்கலம் வென்றால் ரூ.1 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு ஏற்கனவே ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு அறிவிப்பு
மாநில அரசுகளின் பரிசுத்தொகை மட்டுமல்லாமல் மத்திய அரசும் ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியின் போதும் வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுத்தொகை அறிவித்து வருகிறது. அந்தவகையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் இந்தியருக்கு ரூ.75 லட்சம், வெள்ளி வென்றால் ரூ.50 லட்சம், வெங்கலம் வென்றால் ரூ.30 லட்சமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே அதிக தொகை
இந்திய வீரர்களுக்கு அறிவிக்கப்பட்டிருப்பது போன்று இவ்வளவு அதிகப்படியான தொகைகள் வேறு எந்த நாட்டு அரசும் இதுவரை அறிவிக்கவில்லை. அமெரிக்கா, ஜப்பான், கனடா, ஜெர்மணி, ஆஸ்திரேலியா, ஃப்ரான்ஸ், இத்தாலி, ரஷ்யா பிரேசில் போன்ற முன்னணி நாடுகள் கூட இவ்வளவு பரிசுத்தொகையினை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.