டெல்லி: ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதற்கு வீரர்களை அனைவரும் ஊக்குவிக்க வேண்டும் என்று, ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற துப்பாக்கிச் சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா நெகிழ வைக்கும் வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
2008 ஆகஸ்ட் 11ல் சீனாவின் பீஜிங்கில் நடந்த ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்றார்.
ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் இந்தியா பெற்ற முதல் தங்கம் அதுதான். பிந்த்ரா தங்கம் வென்று 10 ஆண்டுகளாகிறது. அதையொட்டி, செட்சிந்தனிஸ் என்ற நிறுவனம் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது.
அதில், அடுத்து நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா அதிக பதக்கங்களை வெல்ல வேண்டும் என்று தனது ஆசையை பிந்த்ரா கூறியுள்ளார்.
கடின உழைப்பு இருந்தால், சரியான இலக்குடன் செயல்பட்டால் பதக்கம் வெல்ல முடியும். தொடர்ந்து பயிற்சி எடுக்க வேண்டும் என்று வீரர்களுக்கு அபினவ் பிந்த்ரா ஆலோசனை வழங்கியுள்ளார்.
மேலும், பதக்கங்கள் வெல்வதற்கு நமது வீரர்கள், வீராங்கனைகளுக்கு அனைவரும் ஊக்கமளிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.