பெய்ஜிங்: சீனாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் அபிஷேக் வர்மா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
சீனாவின் பெய்ஜிங் நகரில் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் சார்பாக அபிஷேக் வர்மா இறுதி போட்டிக்கு முன்னேறினார்.
தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய அபிஷேக் வர்மா, 9 சுற்றுகளில் 242.7 புள்ளிகள் பெற்று தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இரண்டாவது இடத்தில் ரஷ்ய வீரர் ஆர்டம் 240.4 புள்ளிகளோடு வெள்ளியும், மூன்றாவது இடத்தில் கொரியாவின் ஹான் வெண்கலம் வென்றார்.
இந்த வெற்றியின் மூலம் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு அபிஷேக் வர்மா தகுதிபெற்றுள்ளார். மேலும், முதன் முறையாக உலக கோப்பை தொடரில் பங்கேற்ற அபிஷேக், தங்கம் வென்று சாதனை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் அஞ்சும் மோட்கில், அபூர்வி சண்டேலா, சவுரப் சவுத்ரி, திவ்யன்ஷ் ஆகியோரும் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெறுவதை உறுதி செய்துள்ளனர். போட்டிகளில் வெற்றி பெற்ற அனைத்து இந்திய வீரர்களுக்கும் உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.