பாலெம்பங் : ஆப்கானிஸ்தான் தடகள வீரர்கள் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க இந்தோனேசியா வந்தடைந்து உள்ளனர். இந்த வீரர்களில் சிலர், ரிக்கெட்டில் எப்படி ரஷித் கானுக்கு ஐபிஎல் போன்ற தொடர்களில் இந்தியா உதவியதோ, அது போல எங்களுக்கும் பயிற்சிகளில் உதவி செய்ய வேண்டும் என தங்கள் விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.
அவர்கள் ஏன் இந்தியாவில் பயிற்சி செய்ய விரும்புகிறார்கள் என்பதற்கான காரணம் மனதை உலுக்குவதாக உள்ளது. இவர்கள் ஆப்கன் தலைநகர் காபூலில் விமான நிலையத்திற்கு செல்லும் வழியில், அமெரிக்க பீரங்கிகள் இவர்களை நோக்கி வந்துள்ளது. அதைக் கண்டு, அத்தனை தடகள வீரர்களும் திகில் அடைந்துள்ளனர். எனினும், அருகில் வந்தவுடன் பீரங்கிகளுக்கு வழி விடுமாறு கூறிவிட்டு அந்த அமெரிக்க படை சென்றுவிட்டது.
இவர்களில் சிலர், கடந்த புதன்கிழமை காபூலில் நடந்த குண்டுவெடிப்பை நேரில் கண்டவர்கள் என்பது அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக இருக்கிறது. அதில் ஜாஹிரி என்பவரும் ஒருவர்.
அவர் இது பற்றி கூறுகையில், “நாங்கள் அமெரிக்க பீரங்கியைக் கண்ட போது எப்படி உணர்ந்தோம் என்பது உங்களுக்கு புரியாது. நாங்கள் எப்பொழுதும் திகிலிலேயே வாழ்கிறோம். ஆனால், நாங்கள் அமைதியான வாழ்க்கை வாழ விரும்புகிறோம். எங்கள் கனவுகளை அடைந்து, நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என நினைக்கிறோம்” என்றார் ஜாஹிரி.
ஆப்கன் நாட்டின் கிரிக்கெட் தற்போது வளர்ச்சி அடைந்து உள்ளது. முக்கியமாக, அந்த நாட்டின் ரஷித் கான், ஐபிஎல் தொடரில் ஆடியது மூலம் உலகப் புகழ் அடைந்துள்ளார். அந்த நாட்டில் ஒரு நட்சத்திரமாக திகழ்கிறார்.
தங்கள் நாட்டு கிரிக்கெட்டுக்கு உதவியது போல, தடகள வீரர்களுக்கும் பயிற்சி உள்ளிட்டவற்றில் இந்தியா உதவ வேண்டும் என கேட்கின்றனர் இந்த வீரர்கள். ஜாஹிரி இது தொடர்பாக சில முறை இந்திய தடகள அமைப்புக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறி இருக்கிறார். எனினும், எந்த பதிலும் அவருக்கு கிடைக்கவில்லை.