2 மாதங்களாக வீட்டில் முடங்கியுள்ள ரஜாக்
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக வீட்டில் முடங்கியுளளார் பளுதூக்கும் வீராங்கனை நேஹா ரஜாக். கடந்த ஆண்டு அபுதாபியில் நடைபெற்ற சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற 19 வயதான நேஹா ரஜாக் அதில் 4 வெண்கல பரிசுகளை வென்றார். இதற்கென அவருக்கு மத்திய விளையாட்டுத்துறை சார்பில் 4 லட்சம் ரூபாய் தரப்பட வேண்டியுள்ளது.
வேலையின்றி அவதி
இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா வைரஸ் காரணமாக வீட்டில் முடங்கியுளள நேஹாவின் பெற்றோரும் வேலையின்றி அவதியுற்று வருகின்றனர். அவருடைய தந்தை சலவைத் தொழிலாளியாக பணிபுரிந்து வந்த நிலையில், தற்போது அவரும் அவரது மனைவியும் வேலையின்றி இருப்பதாக அவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
ரஜாக் துன்பம்
கடந்த 3 மாதங்களாக வீட்டு வாடகை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக நேஹாவின் தந்தை கவலை தெரிவித்துள்ளார். இதையடுத்து வீட்டின் உரிமையாளர் வாடகையை கேட்டு நச்சரிப்பதாகவும் இல்லையென்றால் வீட்டை காலி செய்ய வலியுறுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார். இதனிடையே, அவர்களின் பிரச்சினைகள் குறித்து ஜார்கண்ட் சிறப்பு ஒலிம்பிக் கமிட்டி தொடர்ந்து கண்காணித்து வருவதாக அதன் டைரக்டர் கூறியுள்ளார். அவர்களுக்கு உடனடி நிதி தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரஜாக்கிற்கு கிடைத்த சொற்ப உதவி
இவர்களின் நிலை குறித்து முன்னதாக டெலிகிராப் மூலம் செய்தி பரவியதால், ஜார்கண்டின் சிறப்பு ஒலிம்பிக் கமிட்டி மூலம் 5,000 ரூபாய் மற்றும் மளிகை பொருட்களும், லண்டனை சேர்ந்த தொழிலதிபர் மூலம் 10,000 ரூபாய் உள்ளிட்ட உதவிகள் கிடைத்தன. ஆனால் தொடர்ந்து வேலையின்றி முடங்கியுளளதால், வீட்டு வாடகை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக நேஹாவின் தந்தை வருத்தம் தெரிவித்துள்ளார்.