போராடி தோல்வி
அர்ஜென்டினா அணியுடனான அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா 1 - 2 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியுள்ளது. ஆட்டதின் துவக்கத்தில் 1 - 0 என லீட் எடுத்தது இந்தியா. இரண்டாவது மற்றும் மூன்றாவது பகுதியில் அர்ஜென்டினா 2 - 1 என முன்னிலை பெற்றது. இறுதி பகுதியில் கோல் கணக்கை சமன் செய்ய முயன்ற இந்தியா அதில் போராடி தோற்றது.
வாழ்த்து மழை
இந்திய மகளிர் அணி ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தது. அதில் தோல்வியடைந்திருந்தாலும், அவர்களின் சிறப்பான ஆட்டத்திற்காக இந்திய பிரதமர் மோடி, விளையாட்டு பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். ஆனால் ஒரு வீராங்கனைக்கு மட்டும் சாதி ரீதியான தாக்குதல் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீராங்கனைக்கு கொடுமை
இந்திய மகளிர் அணி அரையிறுதியில் தோல்வியடைந்தவுடன், வீராங்கனை வந்தனா கட்டாரியாவின் கிராமத்தைச் சேர்ந்த பிற சமூகத்தை சேர்ந்த இருவர், வந்தனாவின் வீட்டிற்கு முன் சென்று அவரின் குடும்பத்தினர் மீது சாதிய ரீதியலான தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
சாதி ரீதியாக தாக்குதல்
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள ரோஷ்னாபாத் கிராமத்தை சேர்ந்தவர் இந்திய மகளிர் ஹாக்கி அணியின் வீராங்கனை வந்தனா. அரையிறுதியில் இந்தியா தோற்றவுடன், இவரின் வீட்டின் முன் இரண்டு இளைஞர்கள் பட்டாசுகள் வெடித்துக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வந்தனாவின் குடும்பத்தினரை சாதி ரீதியாக இழிவுபடுத்தியுள்ளனர். பட்டியலினத்தவர்கள் அதிகம் இருந்ததாலேயே அணி தோல்வியடைந்ததாகவும், இந்தியாவின் அனைத்து விளையாட்டுகளில் இருந்தும் பட்டியலினத்தவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
போலீசாரிடம் புகார்
இதுதொடர்பாக வந்தனாவின் சகோதரர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் அரையிறுதிப்போட்டி முடிந்ததும் வீட்டிற்கு வெளியில் பெரிய அளவிலான சத்தங்கள் கேட்டது. நாங்கள் வெளியே சென்று பார்த்தபோது எங்கள் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு உயர்சாதியினர் வீட்டிற்கு முன் ஆடிக்கொண்டிருந்தனர். அவர்கள் சாதி ரீதியாக பேசி காயப்படுத்தினர். எங்களது குடும்பத்தை அவதூறாக பேசினர் எனக்குறிப்பிட்டுள்ளார்.
காவல்துறை நடவடிக்கை
இந்தப் புகாரின் பேரில் அவதூறு வழக்குப்பதிவு செய்த போலீசார் ரகளையில் ஈடுபட்ட இரண்டு பேரில் ஒருவரைக் கைது செய்துள்ளனர். மேலும் மீதமுள்ள ஒருவரை தேடி விரைவில் பிடித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சாதனை
இந்திய அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேற மிக முக்கியமான காரணமாக இருந்தவர் வந்தனா. ஒலிம்பிக்கில் 4வது லீக் ஆட்டத்தின் போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக இந்த வந்தனா ஹாட்ரிக் கோல்கள் அடித்துப் புதிய சாதனை படைத்தார். இதுவரை ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் எந்த வீராங்கனையும் ஹாட்ரிக் கோல் அடித்தது இல்லை. முதல் முறையாக இந்த வரலாற்றை வந்தனா படைத்து, இந்திய அணியை காலிறுதிக்கு அழைத்துச்சென்றார். இப்படி பட்ட திறமையான வீராங்கனைக்கு சாதி ரீதியாக துன்பம் வருவதா என ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.