லாலி, ஹரியானா: உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணித் தேர்வு நடைபெறவுள்ள நிலையில் ஹரியானா வீரர் மோஹித் சர்மா, ரஞ்சிப் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி தேர்வாளர்களின் கவனத்தை திருப்பியுள்ளார்.
இன்னும் சில மணி நேரங்களில் உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்படவுள்ளது. இதில் இடம் பெற வேண்டும் என்ற துடிப்புடன் பல வீரர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஹரியானா மாநிலம் லாலியில் நடந்து வரும் டெல்லிக்கு எதிரான ரஞ்சிப் போட்டியில் ஹரியானா வேகப் பந்து வீச்சாளர் மோஹித் சர்மா ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
அவர் வீழ்த்திய மூன்று வீரர்களில் ஒருவர் வீரேந்திர ஷேவாக் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லிக்கு எதிரான 2வது நாள் ஆட்டத்தின்போது ஹரியானாவின் சர்மா இந்த சாதனையைச் செய்தார். நேற்று 7 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் என்ற நிலையில் இருந்த டெல்லி அணி இன்றைய ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்தது. கூடுதலாக ரன் எதையும் அது சேர்க்கவில்லை. தொடக்க ஓவரிலேயே அடுத்தடுத்து 3 விக்கெட்களைச் சாய்த்து டெல்லியின் கதையை முடித்து விட்டார் மோஹித் சர்மா.
டெல்லி வீரர் ஷேவாக் சிறப்பாக ஆடி 147 ரன்களைக் குவித்தார். இந்த இன்னிங்ஸில் 46 ரன்களைக் கொடுத்து மொத்தம் 4 விக்கெட்களைச் சாய்த்தார் மோஹித் சர்மா.
உலகக் கோப்பைப் போட்டிக்கான 30 பேர் கொண்ட உத்தேச அணியில் மோஹித் சர்மாவும் இடம் பெற்றுள்ளார். இறுதி அணியில் அவர் இடம் பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. கேப்டன் டோணியிடம் நற் பெயர் பெற்றவர் என்றாலும் கூட திறமையான பந்து வீச்சாளர் மோஹித் சர்மா என்பதால் பெரும் நம்பிக்கையுடன் உள்ளார். இன்றைய ஹாட்ரிக் அவருக்கு நல்ல பெயர் தருமா என்பது மாலைக்குள் தெரிய வரும்.